'மிகப்பெரிய ரிஸ்க்' தம் அடிப்பவர்களே.. உங்களுக்கு மட்டும் கொரோனா வந்தால்.. 'ஹூ' எச்சரிக்கை
ஜெனிவா: புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 50 சதவீதம் அதிக ரிஸ்க்கை சந்திப்பார்கள் என்றும் இறக்கும் அபாயமும் மற்றவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கே அதிகம் என்றும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு காற்று வழியாக பரவி வருகிறது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பரவல் அதிகமாக இருக்கிறது. முககவசம் அணியாதவர்களை மோசமாக பாதிக்கிறது. கைகளை கழுவாமல் கண்ட இடங்களில் தொட்டவர்கள், கையோடு மூக்கை தொட்டவர்கள் கொரோனாவிற்கு பிடித்தமானவர்களாக உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உள்ளது. உலகம் முழுவதுமே முதல் அலையை விட இரண்டாவது அலையில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் சொல்லவே வேண்டாம். நிலைமை மிக மோசமாகவே உள்ளது. பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், உயிரிழப்பு அதிகமாகவே உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
உலக சுகாதார மையம்
உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ள கருத்து புகைப்பிடிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் கூறுகையில். புகைப்பிடிப்பவர்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மற்றவர்களை விட கடுமையான கோவிட் நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
புற்றுநோய் வரும்
அதேபோல் புகைப்பிடிப்பவர்களுக்கே இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்து 50 சதவீதம் வரை உள்ளது. எனவே புகைப்பிடிப்பதை நிறுத்துவதே கொரோனா வைரஸின் ஆபத்தை குறைப்பதற்கான மிகச் சிறந்த விஷயம் அத்துடன் புகைப்பிடிப்பதால் புற்றுநோய்கள், இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகம் என்றும் உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
அழைப்பு
"உலக சுகாதார அமைப்பின் பிரச்சாரத்தில் சேர்ந்து புகையிலை இல்லாத சூழல்களை உருவாக்குவதன் மூலம் அனைத்து நாடுகளும் தங்கள் பங்கை ஆற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்' என்றும் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தி உள்ளார்.
ஐரோப்பா அதிகம்
உலகளவில், தோராயமாக 39% ஆண்கள் மற்றும் 9% பெண்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர். இப்போது உள்ள எண்ணிக்கையை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கையை அரசுகள் எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகிறது. தற்போது ஐரோப்பாவில் மிக அதிகமான புகைபிடித்தல் விகிதம் 26% ஆக காணப்படுகிறது.