வாரத்தில் 10,000 பேருக்கு எபோலா தொற்று அபாயம்... பலி எண்ணிக்கை 4447 ஆனது!
ஜெனிவா: எபோலா நோய்க்கு இதுவரை 4,447 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், வாரத்திற்கு பத்தாயிரம் பேர் எபோலா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் நிலவுவதாகவும் அது கவலைத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா' என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும் தாக்கி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்நோய்க்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,447 ஆகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அந்த அமைப்பின் துணை இயக்குநர் புரூஸ் ஆய்வார்டு ஜெனீவாவில் நேற்று கூறியதாவது :-
வேகமாகப் பரவுகிறது...
கடந்த இரண்டு மாதங்களாக எபோலா வைரஸ் காய்ச்சல் படுவேகமாகப் பரவி வருகிறது. வாரத்துக்கு 10 ஆயிரம் பேருக்கு எபோலா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
தனி வார்டுகளில் சிகிச்சை...
சியரா லியோன், கினி, லைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இந்நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
பலி...
தற்போது 4,447 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,914 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவி வரும் வேகத்தை பார்த்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக உயரும் அபாயம் உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும்...
ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டி இந்நோயின் தாக்கம் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் காணப்படுகிறது. அங்கும் சிலர் எபோலாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.