ப்ளீஸ், விட்டு விடுங்கள்... இறந்த கணவரின் உடலுடன் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட பெண்
சின்சினாட்டி: போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்.
போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஈவா ஹாலந்த். இவரது கணவரின் பெயர் மைக் செட்டில்ஸ். இவர் ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையானவர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
போதையால் மரணம்...
அமைதியான இவர்களது வாழ்க்கையில் ஹெராயின் புகுந்து சீரழித்து விட்டது. போதைக்கு அடிமையாகிப் போன மைக் செப்டம்பர் 2ம் தேதி மரணமடைந்தார்.
புகைப்படம்..
உடைந்து போன ஈவா, அந்த சோகத்திலிருந்து உடனடியாக வெளியே வந்து ஒரு காரியத்தை செய்தார். சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தனது கணவரின் உடலுக்கு அருகே தானும், தனது பிள்ளைகளுமாக நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
வேண்டுகோள்...
பின்னர் இந்தப் புகைப்படத்தை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வெளியிட்டார். கூடவே தனது சோக வாழ்க்கையையும், மைக்குக்கு நேர்ந்த கதியையும் விளக்கி, இதுதான் எல்லோருக்கும் கதி. கடைசியில் மரணம்தான் கிடைக்கும். இன்றே போதைப் பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நன்றி...
அவரது இந்தக் கடிதமும், புகைப்படமும் பலரையும் உலுக்கியுள்ளது. பலரும் தங்களது கெட்ட பழக்கத்தை விட ஆரம்பித்து விட்டதாக ஈவாவுக்கு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் தனது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட இந்தப் புகைப்படம் உதவியதாக கூறி நடு ரோட்டில் வைத்து ஈவாவைக் கட்டிப் பிடித்து அழுது நன்றி கூறியுள்ளார்.
வைரல்...
இந்தப் புகைப்படம் இப்போது வைரல் ஆகியுள்ளது. 2 லட்சத்து 50 ஆயிரம் தடவைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. இந்தத் தம்பதியின் பிள்ளைகளின் பெயர்கள் லூகாஸ் மற்றும் அவா. செட்டில்ஸும், ஈவாவும் 11 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர்.
ஈவாவின் கடிதம்...
ஈவா தனது கடிதத்தில் கூறியுள்ளவற்றிலிருந்து சில பகுதிகள்:
நீங்கள் முடிவெடுக்காத ஒவ்வொரு நாளும் உங்களது முடிவு வேகமாக நெருங்கி வருகிறது என்று அர்த்தம்.
எந்தப் பெற்றோரும் தங்களது பிள்ளையை அடக்கம் செய்வதை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அதே போலத்தான் எந்தக் குழந்தையும் இவ்வளவு இளம் வயதில் தனது பெற்றோரை இழக்க விரும்பாது.
மகிழ்ச்சி தான்...
இது தவிர்க்கக் கூடியதாகவே இருந்தது. ஆனால் அதைச் செய்யத் தவறியதால் மொத்தக் குடும்பமும் இன்று சோகத்தில் உள்ளது. இந்தப் படம் பலருக்கு பார்க்க கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது எனக்கு மகிழ்ச்சி தரும்.
இது தான் நிஜம்...
ஹெராயின் சுகம் தராது. கொல்லும். உயிரைப் பறிக்கும். இதை இப்பழக்கம் உடையோர் உணர வேண்டும். அதெல்லாம் சாக மாட்டோம் என்று நீங்கள் நினைக்கலாம். மைக்கும் கூட அப்படித்தான் நினைத்தார். இன்று அவரது நிலையைப் பாருங்கள்.
சந்தோஷமான வாழ்க்கை...
நான் அவரது வாழ்க்கையில் வரும் முன்பே அவருக்கு ஹெராயின் பழக்கம் வந்து விட்டது. இன்று அவரது கனவுகள், நம்பிக்கை எல்லாமே போய் விட்டது. தனது வாழ்க்கை இப்படி மாறிப் போகும் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. வாழ்ந்த வாழ்க்கை முழுக்க அவர் சந்தோஷமாக இருந்தார்.
நல்ல மனிதர்...
அவர் நல்ல மகனாக, நல்ல சகோதரனாக, நல்ல நண்பனாக, மிகச் சிறந்த தந்தையாக இருந்தார். எதையும் விட தனது குழந்தைகளை அவர் அவ்வளவு நேசித்தார். ஆனால் இன்று அவர் இல்லை.
சிகிச்சை...
எங்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தினார். இதற்காக தனது பழக்கத்திலிருந்து மீள சிகிச்சை கூட எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லாம் கை மீறிப் போய் விட்டது. யாருக்காவது இது பயன்படுமே என்ற நோக்கில்தான் இதைச் சொல்கிறேன். மாறி விடுங்கள் இப்பழக்கம் இருந்தால் என்று அதில் கூறியிருந்தார் ஈவா.