செல்ஃபோன் விளையாட்டால் விபரீதம்... ஒரே கயிற்றில் தந்தை, மகன் தற்கொலை... குன்றத்தூரில் ஷாக்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், மகன் இறந்த தூக்கம் தாளாமல், அதே கயிற்றில் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர் என்பவர், கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு தினேஷ் குமார், நவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நவீன் குமார் செல்போனில் தொடர்ந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனை அவரது தந்தை சுந்தர் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். எனினும், தந்தையின் பேச்சை கேட்காமல், நவீன் குமார் செல்போனில் விளையாடுவதிலேயே அதிகம் ஆர்வமும் கொண்டிருந்துள்ளார்.

வழக்கம்போல், மகன் நவீன் குமார் செல்போனில் விளையாடியதை தந்தை சுந்தர் கண்டித்துள்ளார். இதனால் மணமுடைந்த நவீன் குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், அறையில் சென்று பார்த்த போது நவீன் குமார் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது உறவினர்கள், நவீன் குமார் உடலை மீட்டு அழுது கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில், தன்னால் தனது மகன் இறந்து விட்டானே என்ற சோகத்தில் உறைந்த சுந்தர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால், தனது கையை அறுத்து கொண்டு, அதே கயிற்றில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையும், மகனும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டதால், அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை, மகன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தையும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பழந்தண்டலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications