மொளச்சூர் முருகனுக்கு கண்மலர் காணிக்கை தந்த சசிகலா! மனமுருகி வேண்டுதல்! மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்களை சசிகலா காணிக்கையாக வழங்கினார்.
காஞ்சிபுரம்: தைப்பூச திருநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்ட சசிகலா, மொளச்சூர் முருகன் கோவிலில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக்கவசம், தங்கக் கண் மலர்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார். பொன்னியம்மனை தரிசனம் செய்து விட்டு தன்னை காண வந்த அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கொரானா பரவல் வழிகாட்டி விதிமுறைகளின்படி, தைப்பூச தினமான நேற்று, கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் இன்றைய தினம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான வி.கே. சசிகலா கலந்துகொண்டார்.

சசிகலாவிற்கு வரவேற்பு
தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தாலும் காஞ்சிபுரம் சென்ற சசிகலாவுக்கு, அமமுகவினர் வழிநெடுக வரவேற்பு அளித்தனர். மொளச்சூர் பகுதியில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய திருக்கோயிலுக்கு வருகை தந்த சசிகலாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப்பெருமானுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்பில் 4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கினார்.

வெள்ளிக்கவசம் தங்கக் கண்மலர்
சசிகலா காணிக்கையாக செலுத்திய வெள்ளிக் கவசம் மற்றும் வேலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அந்த வெள்ளிக் கவசங்கள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையில் பங்கேற்று சசிகலா சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

வேண்டுதல் நிறைவேறினால் காணிக்கை
கை, காலில் அடிபட்டால் கை, கால் உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம், நம்முடைய பார்வை மங்கினால் கண் போன்ற உருவை வாங்கி காணிக்கையாக செலுத்தும் பழக்கங்கள் உள்ளன. அப்படிச் செய்தால், அந்த பாகங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் சரியாகும் என்பது மக்களின் நம்பிக்கை. சசிகலாவிற்கு கடந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் சரியானது. அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய சசிகலா தற்போது மீண்டும் மக்களை சந்திப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என அரசியல் ரீதியாக செயல்படுகிறார்.

பொன்னியம்மனுக்கு வழிபாடு
முருகன் கோவிலில் காணிக்கை செலுத்திய சசிகலா பொன்னியம்மன் திருக்கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது அங்கு அவரைக் காண வந்திருந்த ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெருமாள் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு செங்கல் எடுத்து கொடுத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் சசிகலா. தைப்பூசத்தை முன்னிட்டு புது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.

அரசியல் பயணம்
மொளச்சூர் முருகன், பெருமாள் கோவில், பொன்னியம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டு வழிபட்டாலும் தன்னை காண வந்த ஏழைகளுக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மொளசூர் பெருமாள், அமமுக நிர்வாகிகள் நாராயணசாமி, ரஜினி குமாரவடிவேல், சக்திவேல், திருவேங்கடம், ஜெகதீஷ், பார்த்தசாரதி, எல் ராஜேந்திரன், காந்தூர் சிவா, ஸ்ரீபெரும்புதூர் சதீஷ் நரேஷ், ராதாகிருஷ்ணன், கல்யாணம் ஜெயகாந்தன், உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகளும் கிராம பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications