அமைச்சர் வீட்டுக்கு அருகே திடீரென பற்றி எரிந்த கார்.. உடனே தகவல் சொன்னதால் பெரும் சேதம் தவிர்ப்பு!
கன்னியாகுமரி : அமைச்சர் மனோ தங்கராஜ் வீட்டின் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டம் பாலூர் சந்திப்பு பகுதியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வீடு அருகே சாலையில் வந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் மனோ தங்கராஜ். இவரது வீடு கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் இனையம் பகுதியை சேர்ந்த ஆசீம் என்பவர் தனது காரில் வந்து கொண்டிருந்தபோது காரின் முன்பக்கத்தில் திடீரென புகை எழுந்துள்ளது.

திடீரென காரில் தீ
இதனைக் கண்ட ஆசீம் பயந்து காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்கி ஓடவே காரின் முன்பக்கம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. இதனால் பரபரப்பு ஏற்படவே, அந்த வழியாகச் சென்ற அமைச்சர் மனோ தங்கராஜ், உடனே குளச்சல் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அசம்பாவிதம் தவிர்ப்பு
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் வீட்டுக்கு அருகே கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தீ பிடிக்க காரணம்
கார் திடீரென தீப்பிடித்து கார் எரியக் காரணம் என்ன என்பது குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. கார் என்ஜின் கோளாறால் தீ விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications