கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னையில் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி : கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை (15ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தொடர்மழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சுமாா் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை நீா் சூழ்ந்துள்ளது. சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைக்கு ஒரே நாளில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. நாகா்கோவில் நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வள்ளியாறு, பழையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் மிகப்பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெரிசனங்கோப்பு, அருமநல்லூா், நாவல்காடு, புரவசேரி, செண்பகராமன்புதூா், தோவாளை, புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, சுசீந்திரம், காமராஜபுரம், தென்தாமரைகுளம், தேரேகால்புதூா், லாயம் திருவட்டாறு, குலசேகரம் உள்பட மாவட்டத்தில் உள்ள150-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் விரைவில் முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரி சென்று அங்கு ஆய்வு செய்ய உள்ளார்.
தொடா் மழையின் காரணமாக சனிக்கிழமை 3 ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரியில் தொடர்மழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் திங்கள்கிழமையான நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் ஜஸ்ட் 4 மணி நேர விசிட்..! ரூ.23 கோடி செலவிடும் மாநில அரசு!
இதேபோல் சென்னையில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில், சில பகுதிகளில் உள்ள பள்ளிகள் வெள்ள நிவாரண முகாம்களாக செயல்படுகின்றன. அந்த பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.