போடாத ரோட்டுக்கு ரூ.3 கோடிக்கு பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்.. எம்.ஆர். விஜயபாஸ்கர் புகார்
திமுக ஒப்பந்ததாரர் ஒருவர் போடாத ரோட்டுக்கு ரூ.3 கோடிக்கு பில் போட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
கரூர்: நன்றாக உள்ள சாலைகளை புதிதாக போடுவதாக கூறி கரூர் மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர் பணம் எடுத்துள்ளனர் என ஆதாரத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கிணத்தைக் காணோம் என்று வடிவேலு புகார் கூறுவார். அந்த பாணியில் சாலைக்காக புகார் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இந்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் முட்டல் மோதல் அதிகமாகவே இருக்கும்.
இப்போது சாலை போடுவதில் ஒப்பந்தம் அளிக்கப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்து செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்பாட்டம் நடத்தியது. இதில் கரூர் மாவட்டத்தில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

சாலைப்பணிகள் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை அழைத்துச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் ஈசநத்தம் சாலை தற்போது போடப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளதையும், இதே போல், வால்காட்டுப்புதூர், சுக்காலியூர் ஈசநத்தம் கரூர் மூன்று வழிசாலைகள், புகளூர் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை செல்லும் சாலை, மண்மங்கலம் நன்னியூர் புதூர் ஆகிய சாலைகளும், வேலாயுதம்பாளையம் பகுதியில் சில சாலைகளும் சேர்த்து ரூ.4 கோடி அளவில் மொத்தமாக ரூ.10 கோடி அளவில், தார்சாலைகள் புதிதாக போடப்பட்டதாக கணக்கு காட்டி பணம் எடுத்துள்ளதாகவும், இந்த சாலைகள் ஏற்கனவே தரமாக உள்ளதாகவும் கூறினார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஆங்காங்கே அந்த சாலைகளை ஆதாரப்பூர்வமாக காட்டி, ஏற்கனவே போடப்பட்ட சாலைகளுக்கு தான் இந்த புதிய சாலை என்ற பெயர் வைத்து அதற்கான பணத்தினை பெற்றுள்ளனர் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனுவை அளித்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர். கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 170 கோடியில் நெடுஞ்சாலைத் துறையில் பணிகளுக்கு ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை, வேலை செய்யாமல் ஒப்பந்ததாரர் பணம் எடுத்துள்ளனர் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

ரூ.3 கோடி அரசுப் பணம்
நன்றாக உள்ள இந்த சாலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும். இதற்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.

அமைச்சரின் ஆதரவாளருக்கு ஒப்பந்தம்
இதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டதில் நெடுஞ்சாலை துறை, கிரசர், சவுடு மண் என திமுகவினர் கூறு போட்டு விற்று வருகின்றனர். 140 கோடி ரூபாய் வேலையை அமைச்சரின் ஆதரவாளர் எம் .சி.எஸ் ஆனந்த் காண்ட்ராக்டர் ஒருவர் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

அரசுக்கு நிதி இழப்பு
கரூர் மாவட்ட அளவில் திமுக ஆட்சி அமைத்த 10 மாத காலத்தில் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. உதாரணத்திற்கு, ஏற்கனவே போடப்பட்ட தார்சாலைகளை மீண்டும் போடப்பட்டதாக கூறி ரூ.10 கோடிக்கு மேல் அரசிடம் இருந்து நிதி பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications