பாஜக வலையில் திமுக எம்.எல்.ஏ?.. உண்மை என்ன? ‘இறுதி வரை திமுக தான்'.. பதறிப்போய் மறுத்த மாணிக்கம்!
கரூர் : கரூர் மாவட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவில் இணைந்து பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து, இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரபரத்த நிலையில், அந்த எம்.எல்.ஏவே அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவில் இருந்து முக்கிய புள்ளிகளை இழுக்கும் ஆபரேஷனில் பாஜக ஈடுபட்டுள்ள நிலையில், குளித்தலை திமுக எம்.எல்.ஏ, பாஜகவில் இணையப் போவதாக ஒரு தகவல் தீயாகப் பரவியது.
அந்த எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அந்தத் தகவல் சிறகடித்தது.
இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எந்தக் காலத்திலும் நான் திமுகவை விட்டுச் செல்ல மாட்டேன் என உறுதியாகக் கூறி இருக்கிறார் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம்.
என் குரு கலைஞர்.. அரசியலுக்கு “நோ” சொன்ன நெப்போலியன்! திமுக டூ பாஜக தாவிய நடிகரின் இறுதி முடிவு
திமுக கோட்டையான கரூர்
2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகியதொகுதிகளையும் திமுகவே கைப்பற்றியது. அதிமுகவில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி அமைச்சரானார். அதோடு திமுக தலைமையின் நம்பிக்கையைப் பெற்ற அவர், கோவைக்கு பொறுப்பு அமைச்சராகவும் இருந்து பணியாற்றி வருகிறார்.
பாஜக குறி
இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பாஜக. அதன் ஒரு பகுதியாக, மாற்றுக்கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது பாஜக. பாஜகவின் குறியில் திமுகவும் தப்பவில்லை. கடந்த தேர்தலுக்கு முன்பே திமுக எம்.எல்.ஏக்களாக இருந்த கு.க.செல்வம், மதுரை சரவணன் ஆகியோரை இழுத்தது. தற்போது அந்த இருவருமே பாஜகவில் இருந்து விலகிவிட்டனர்.
திமுக எம்.எல்.ஏ தாவல்?
2024 எம்.பி தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வரும் பாஜக, அதிமுக, திமுக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ மாணிக்கம், பாஜகவுக்கு தாவப்போகிறார் என்றும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்றும் தகவல்கள் றெக்கை கட்டிப் பறந்தன.
அமைச்சர் மீது அதிருப்தி?
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அம்மாவட்டத்தின் மற்ற எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் காரணமாக பாஜக வீசிய வலையில் குளித்தலை எம்.எல்.ஏ சிக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த ஸ்கெட்சை போட்டது அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் நாதன் என்றும் கூறப்பட்டது.
குறி வைத்த அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சில வாரங்களுக்கு முன்னர் குளித்தலையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, கருணாநிதி முதன்முதலில் எம்.எல்.ஏ ஆன தொகுதியே இப்படி இருக்கிறது என்றெல்லாம் விமர்சித்தது நினைவுக்கு வரலாம். அதையெல்லாம் முடிச்சுப் போட்டு, பாஜகவின் திட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ ஒருவர் சிக்கிவிட்டார். ஓரிரு நாட்களில் பூகம்பம் வெடிக்கும் என பற்ற வைத்தனர் பாஜகவினர்.
அட வாய்ப்பே இல்ல
அதேநேரம், லோக்கல் திமுகவினரோ, இதெல்லாம் பாஜக சும்மா அடித்துவிடும் கதை. குழப்பத்தை ஏற்படுத்தி தாங்கள் நினைத்ததைச் சாதிக்கப் பார்க்கிறார்கள். ஆளுங்கட்சியான திமுகவின் எந்த எம்.எல்.ஏவும் பாஜக பக்கம் செல்ல மாட்டார். விருதுநகரில் சமீபத்தில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் கூட, குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக கட்சி பணியாற்றதற்காக விருது வழங்கினார். அவரைப் போய் கட்சி தாவுவதாக வதந்தி பரப்புகின்றனர் என மறுப்பு தெரிவித்தனர்.
நான் கட்சி மாறுகிறேனா?
இந்நிலையில், குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கமே, தான் எந்தக் காலத்திலும் திமுகவை விட்டு கட்சி மாற மாட்டேன் என உறுதியாகக் கூறியுள்ளார். தனியார் செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த மாணிக்கம், நான் பரம்பரை திமுககாரன். என்னிடம் பாஜக பேசி கட்சிக்குள் இழுத்துவிட்டதாக கூறுவது பொய்யான தகவல். 30 வருடமாக குளித்தலை நகரச் செயலாளராக அமரவைத்திருக்கும் தலைமையை மீறி கட்சி மாறுவேனா? எனக்கு அரசியலில் வாழ்வு கொடுத்த திமுகவுக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
முழுப் பொய் - வழக்கு தொடரப் போறேன்
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்வது முற்றிலும் பொய். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒற்றுமையாக இருக்கும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். பொய்யான தகவலை பரப்பியவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.