இதுதான் தமிழ்நாடு.. ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருள்-அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்.. மதநல்லிணக்கம்
கிருஷ்ணகிரி: மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை அணிந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் பூஜை பொருட்கள் வழங்கி, அன்னதானம் கொடுத்தனர்.
இந்தியாவில் சில இடங்களில் மதம்சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது உருவாகி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து அல்லது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த அமைப்பினர் ஒன்றாக சேர்ந்து மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தாமாகவே ஈடுபட்டு வருவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
மதநல்லிணக்க மண்ணாக திகழும் தஞ்சை... கோயில் திருவிழாவில் இந்துக்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்
தமிழகத்தில் மதநல்லிணக்கம்
குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்க நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு முஸ்லிம்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் முஸ்லிம்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின்போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்று வரை நடந்து வருகின்றனர். அந்த வகையில் தான் இன்று தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
மதநல்லிணக்க நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி பழையபேட்டை மிலாது நபி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஹிந்து, இஸ்லாமியர்கள் இடையே மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
பூஜை பொருட்கள் வழங்கல்
இது கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 5ம் ஆண்டாக மிலாது நபி இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பின் தலைவர் அஸ்லாம் தலைமையில் இன்று கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்த சிறப்பு பஜனை-வழிபாட்டின்போது பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம்
மேலும் மாலை அணிந்து பஜனையில் பங்கேற்ற ஐயப்பன் பக்தர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தையும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.