பூஸ்டர் டோஸ் தேவையில்லை.. 2 டோஸ் தடுப்பூசியே போதும்.. தீவிர கொரோனாவையும் தடுக்கும்: ஆய்வில் தகவல்
லண்டன்: கொரோனாவின் கடுமையான பாதிப்புகளை தடுக்க தடுப்பூசிகள் போதுமான அளவு பயனுள்ளவையாக இருப்பதாகவும், எனவே பொது மக்களுக்கு மூன்றாவது டோஸ் அதாவது பூஸ்டர்கள் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் பிரபல மருத்துவ இதழான லேன்செட் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது கொரோனாவின் டெல்டா வகை. தற்போது உலகின் பிற பல நாடுகளில் டெல்டா வகை பரவி வருவதால் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. எனவே, பயத்தின் காரணமாக சில நாடுகள் பூஸ்டர் டோஸ்களை வழங்கத் தொடங்கியுள்ளன.
இதனால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் குறைய ஆரம்பித்துள்ளது. மூன்றாவது டோஸ்களுக்கு தடை விதிக்க உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்தது. மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை கூட இன்னும் பெறவில்லை என்பதை உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டியது.

பூஸ்டர் டோஸ் தேவையில்லை
இந்த நிலையில், WHO உட்பட பல விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை, டெல்டாவின் அச்சுறுத்தல் இருந்தாலும் கூட, "பொது மக்களுக்கு பூஸ்டர் டோஸ் பொருத்தமானதல்ல" என்று கூறியுள்ளது. தீவிர கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும், தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். "ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், தற்போதுள்ள ஆய்வுகள் கடுமையான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை கணிசமாக குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் இல்லை. தடுப்பூசியின் பலன் சிறப்பாக உள்ளது" என்று WHO அமைப்பைச் சேர்ந்த, அனா-மரியா ஹெனாவோ-ரெஸ்ட்ரெபோ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் குழந்தைகளுக்கு கூட 3வது டோஸ்
பிரான்ஸ் போன்ற நாடுகள் முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு, மூன்றாவது டோஸ்களை வழங்க தொடங்கியுள்ளன. இஸ்ரேலில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் போட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு மூன்றாவது டோஸ் வழங்கப்படுகிறது.

10 சதவீதமாவது போட வேண்டும்
WHO தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், இந்த மாத இறுதிக்குள் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதத்திற்கு தடுப்பூசி போடுமாறு ஐநா சுகாதார நிறுவனம் வலியுறுத்துவதால், இந்த ஆண்டு இறுதி வரை பூஸ்டர் டோஸ்களை வழங்குவதை தவிர்க்குமாறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

மக்கள் தொகை
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய் தொற்றுநோயியல் தலைவரான அஸ்ரா கானி, இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவிக்கையில், இது தற்போதைய ஆராய்ச்சியின் "முழுமையான ஆய்வு" என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்டா போன்ற வைரஸ் வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல் திறன் சற்று குறைந்தாலும் கூட, மக்கள்தொகை முழுவதையும் கருத்தில் கொள்ளும்போது அது பிரச்சினையில்லை, என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications