வயதோ 74.. சார்லஸை நெருங்கும் கிரீடம், அரியணை.. பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழா எப்போது தெரியுமா?
லண்டன்: பிரிட்டன் பேரரசி இரண்டாவது எலிசபெத் மறைவை தொடர்ந்து பிரிட்டன் மன்னராக பதவியேற்றுக்கொண்ட மூன்றாம் சார்லஸுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது.
கடந்த மாதம் பிரிட்டன் அரசி 2 வது எலிசபெத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் அரசி கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
எலிசபெத் மரணமடைந்த 2 நாட்கள் கழித்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு லண்டனில் நடைபெற்றது.
ராணி எலிசபெத் மறைவு.. காரணம் என்ன? உண்மையில் உயிரிழந்தது எப்போது? இறப்பு சான்றிதழில் பரபர தகவல்கள்
முடிசூட்டு விழா
இந்த நிலையில் புதிய மன்னர் 2 ஆம் சார்லஸின் முடிசூட்டு விழா வரும் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த பேஜ் சிக்ஸ் என்ற ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தியில், லண்டன் வெஸ்ட் மினிஸ்டரில் இந்த முடிசூட்டு விழா நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
எளிய விழா
மறைந்த 2 ஆம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவை விட இதை சிறியதாகவும், எளிய முறையிலும் நடத்த பிரிட்டன் அரச குடும்பம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் இரண்டாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டாலும் ஜூன் மாதம் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பிறகே அவரால் அதிகாரப்பூர்வ பணியை தொடங்க முடியும் எனக் கூறப்படுகிறது.
அதிக வயது மன்னர்
மன்னர் 2 ஆம் சார்லஸுடன் அவரது மனைவியும் இளவரசியுமான கமீலா, அரசியாக பதவியேற்றுக் கொள்கிறார். 74 வது வயதில் பிரிட்டன் மன்னராக பதவியேற்கும் சார்லஸ்தான், பிரிட்டன் அரச வம்சாவளியிலேயே மிகவும் அதிக வயதில் மன்னராக முடி சூட்டிக்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீடம், அரியணை
சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட பிறகு, அரச குடும்ப பாரம்பரியப்படி பிரிட்டன் மன்னர்கள் அமரும் இறுக்கையான எட்வர்ட் அரியணையில் அவர் அமர்வார். கிறிஸ்தவ மத வழிமுறைப்படி அரசின் இறையாண்மைக்கான செங்கோல், தடி ஆகியவை சார்லஸுக்கு வழங்கப்படும். அத்துடன் புனித எட்வர்ட் கிரீடத்தையும் சார்லஸ் அணிவார்.