ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. கொரோனா முடியல! இந்தியா உட்பட 110 நாடுகளில் பரவும் BA4 வகை.. WHO வார்னிங்
லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓமிக்ரான் கொரோனா கடந்த ஆண்டு இறுதியில் உலகில் பல நாடுகளில் கொரோனா அலையை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது.
இந்தச் சூழலில் உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. இது இந்தியாவில் அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
வேகமெடுத்த கொரோனா! இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சோதனை! மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!
இந்தியா
இந்தியாவில் இன்று மொத்தம் 18,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் சுமார் 130 நாட்களுக்குப் பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. அதேபோல நாட்டில் 122 நாட்களுக்குப் பின்னர் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது. தமிழ்நாட்டிலும் கூட கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இன்னும் முடியவில்லை
இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "இந்த பெருந்தொற்று மாறுகிறது.. ஆனால் இன்னும் அது முடிவடையவில்லை. கொரோனா வைரஸை கண்காணிக்கும் நமது திறன் குறைந்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே பல நாடுகளில் கொரோனா டெஸ்டிங் மற்றும் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைகள் குறைந்துள்ளன.
ஓமிக்ரான் வகைகள்
இதனால் ஓமிக்ரான் கொரோனாவை டிராக் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய வகை ஓமிக்ரான் பாதிப்புகளைக் கண்டறிவதும் சிக்கலாக உள்ளது. பல நாடுகளிலும் BA.4, BA.5 வகை கொரோனா பரவுகிறது. மொத்தம் 110 நாடுகளில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய கொரோனா பாதிப்புகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்புகள் பல நாடுகளில் அதிகரித்து உள்ளது.
தடுப்பூசி தான் ஒரே வழி
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் ஒரே வழி தடுப்பூசிகள் தான். உலக நாடுகள் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தது 70% பேருக்கு வேக்சின் போட வேண்டும். இதை நாங்கள் அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். கடந்த 18 மாதங்களில் மட்டும் 12 பில்லியன் வேக்சின் விநியோகிக்கப்பட்டு உள்ளது. பணக்கார நாடுகளில் வேகிசன் பணிகள் சிறப்பாக நடந்து வந்துள்ளது.
குறைந்த வருமான நாடுகள்
அதேநேரம் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பல கோடி சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கே இன்னும் வேக்சின் கிடைக்கவில்லை. அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் புதிய உருமாறிய கொரோனா ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 58 நாடுகள் மட்டுமே எங்கள் 70% வேக்சின் இலக்கை எட்டி உள்ளது. பல ஏழை நாடுகளால் இந்த இலக்கை எட்ட முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video
மங்கி பாக்ஸ்
அதேபோல உலகில் பல நாடுகளிலும் இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பும் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் மட்டுமே இருக்கும் இந்த பாதிப்பு இப்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. மங்கி பாக்ஸை உலக சுகாதார அமைப்பு பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேநேரம் மங்கி பாக்ஸ் பாதிப்பைத் தடுக்க சில அவசர நடவடிக்கைகள் தேவை என்பதையும் உலக சுகாதார அமைப்பின் இயத்துநர் டெட்ரோஸ் ஒப்புக்கொண்டார்.