"ஜாக்பாட்.." லிஸ் டிரஸ் பதவியில் இருந்தது வெறும் 45 நாள் தான்.. ஆனா ஓய்வூதியம் மட்டும் ஒரு கோடி
லண்டன்: லிஸ் டிரஸ் வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்த போதிலும், அவர் பெற உள்ள ஓய்வூதியம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமராக இருந்த போரஸ் ஜான்சன் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பதவி விலகினார். அதைத் தொடர்ந்து லிஸ் டிரஸ் பிரமதர் ஆனார்.
அங்குள்ள சட்டப்படி ஆளுங்கட்சி தலைவரே பிரதமராக இருப்பார் என்பதால் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. இதில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் மோதினர்.

லிஸ் டிரஸ்5
இருப்பினும், இதில் லிஸ் டிரஸ் தான் வெற்றி பெற்றார். ரிஷி சுனக்கிற்கு தொடக்கத்தில் இருந்த ஆதரவு கடைசியில் அப்படியே சரிந்தது. குறிப்பாக லிஸ் டிரஸ் வரி குறைப்பு தொடர்பான தனது திட்டத்தை வெளியிட்டதும் ரிஷி சுனக்கிற்கான ஆதரவு அப்படியே மளமளவென சரிந்தது. லிஸ் டிரஸை கடந்த மாதம் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் நியமித்தார். ராணி எலிசபெத் மறைவுக்கு முன் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்வு இதுவாகும்.

ராஜினாமா
இருப்பினும், பிரதமர் பதவி ஏற்றதுமே லிஸ் டிரஸுக்கு அடுத்தடுத்து பிரச்சினைகளே அணிவகுத்தன. எந்த வரி குறைப்பு அவரை பிரதமர் பதவிக்கு வர உதவியதோ அதே விஷயம் அவருக்கு எதிராகத் திரும்பியது. பணக்காரர்களுக்கான இந்த வட்டி குறைப்பு பிரிட்டன் பொருளாதாரம் தடுமாறவே காரணமாக அமைந்துவிட்டது. கட்சிக்குள் எதிர்ப்பு அதிகரித்த நிலையில், இரு அமைச்சர்கள் தங்கள் பதவியையே ராஜினாமா செய்தனர்.

ஓய்வூதியம்
அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி லிஸ் டிரஸ் நேற்று பதவி விலகினார். வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்த அவர், குறுகிய காலம் மட்டுமே பிரிட்டன் பிரதமராக இருந்தவர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார். அவர் சில வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்து இருந்தாலும் கூட அவருக்கு பல்வேறு ஓய்வூதியங்கள் கிடைக்க உள்ளது.

ஒரு கோடி
பிரிட்டனில் உயிருடன் இருக்கும் முன்னாள் பிரதமர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தையும் அவர் பெறலாம். குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் மரணமடையும் வரை முன்னாள் பிரதமர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓய்வூதியங்கள் அளிக்கப்படும். சில வாரங்கள் பதவியில் இருந்தாலும் லிஸ் டிரஸுக்கு காலம் முழுக்க ஓய்வூதியம் கிடைக்கும். ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வரை அவர் ஓய்வூதியம் பெறலாம்.

முன்னாள் பிரதமர்கள்
கடந்த 2020-21இல், முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் அதிகபட்சமாக 114,712 பவுண்டுகள் (ரூ 1.05 கோடி) பெற்றார். அதைத் தொடர்ந்து டேவிட் கேமரூன் 113,423 பவுண்டுகள் (ரூ. 1.04 கோடி), தெரசா மே 57,832 பவுண்டுகள் (ரூ. 53 லட்சம்) ஓய்வூதியமாகப் பெற்றார். உயிருடன் இருக்கும் ஐந்து முன்னாள் பிரிட்டன் பிரதமர்கள் இந்த ஓய்வூதியத்தை இப்போது பெற்று வருகின்றனர். இந்தப் பட்டியலில் ஆறாவது நபராக இப்போது லிஸ் டிரஸும் இணைந்து உள்ளார்.

எதிர்ப்பு
இருப்பினும், இதற்கு எதிர்ப்பும் அங்கேயே கிளம்பி உள்ளது. லிஸ் டிரஸ் வெறும் சில வாரங்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்தார் என்பதால் அவருக்கு இந்த ஓய்வூதியத்தைக் கொடுக்கக் கூடாது என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அப்படியில்லை என்றால் லிஸ் டிரஸ்ஸே தானாக முன்வந்து இந்த ஓய்வூதியத்தை மறுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications