செங்கோல், கிரீடம், 1947இல் எடுக்கப்பட்ட மலர்.. ராணி எலிசபெத் சவபெட்டியில் நிரம்பி இருந்த சுவாரஸ்யம்
லண்டன்: பிரிட்டன் மகாராணி எலிசபெத் சவப்பெட்டியில் இருந்த பல்வேறு விஷயங்களும் பலரது கவனத்தை ஈர்த்து இருந்தது. அப்படி என்ன தான் இருந்தது எனப் பார்க்கலாம்.
பிரிட்டன் மகாராணியாக இருந்த ராணி எலிசபெத் கடந்த செப். 8ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் எலிசபெத் தான்.
வயது மூப்பு காரணமாக உடல்நிலை பிரச்சினைகளை எதிர்கொண்டு இருந்த எலிசபெத், சில மாதங்களாகவே பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து பூரண ஓய்வில் தான் இருந்து வந்தார்.
மண்ணறைக்குள் “மகாராணி”.. அன்பு கணவர் “பிலிப்” அருகே எலிசபெத் உடல்! ராஜமரியாதையுடன் நல்லடக்கம்
ராணி எலிசபெத்
ஸ்காட்லாந்தில் அரண்மனையில் ராணி எலிசபெத் ஓய்வு எடுத்து வந்த நிலையில், செப். 8ஆம் தேதி அங்கேயே அவர் மறைந்தார். அவரது மறைவு பிரிட்டன் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவைத் தொடர்ந்து பிரிட்டன் நாட்டில் 10 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தும் வகையில் அவரது உடல் வைக்கப்பட்டது.
நல்லடக்கம்
அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட இடத்தில் இருந்து முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு இருந்து வின்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மறைந்த கணவர் பிலிப்பின் உடல் உடன் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசு குடும்பத்தினர்
இந்த நிகழ்வில் பதவியில் இருக்கும் அனைத்து அரசு குடும்பத்தினரும் கறுப்பு ராணுவ உடை அணிந்து இருந்தனர். இளவரசர் ஹாரி தனது அரசு பதவியைத் துறந்த நிலையில், அவர் மட்டும் சாதாரண கறுப்பு உடை அணிந்து இருந்தார். ராணி எலிசபெத்தின் மகன் கிங் சார்லஸ் மற்றும் அவருடன் பிறந்த அன்னே, ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் ஆகியோர், ராணி எலிசபெத்தின் உடல் எடுத்துச் செல்லப்படும் போது முதல் வரிசையில் சென்றனர். அதன் பின்னர் பிற அரசு குடும்பத்தினர் வந்து இருந்தனர்.
ஸ்டேட் கிரீடம்
அதேபோல ராணியின் சவப்பெட்டியில் இருந்த விஷயங்களும் பலரது கவனத்தை ஈர்த்து இருந்தது. அப்படி என்ன தான் இருந்தது எனப் பார்க்கலாம். ராணியின் சவப்பெட்டி ராயல் ஸ்டாண்டர்ட் கொடியால் மூடப்பட்டிருந்தது. இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் மற்றும் செங்கோல் மலர்கள் மீது வைக்கப்பட்டு இருந்தது. மேலும், அதில் புதிய மன்னரும் ராணி எலிசபெத்தின் மகனுமான சார்லஸ் தனது கைப்பட எழுதிய கடிதமும் வைக்கப்பட்டு இருந்தது.. அதில் அவர் "உங்கள் அன்பான நினைவில் சார்லஸ் ஆர்" என்று கைப்பட எழுதி இருந்தார்.
பூக்கள்
96 வயதான ராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்காக அரண்மனையின் தோட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பூக்கள் எடுத்து வரப்பட்டன. இவை அனைத்திற்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் உள்ளன. பக்கிங்ஹாம் அரண்மனையில் தோட்டக்காரர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ராணிக்குப் பூக்களை அனுப்புவார்கள். அதை அடிப்படையாக வைத்தே ராணிக்குப் பிடித்தது போல அவரது இறுதி ஊர்வலத்திற்கும் பூக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
திருமண நிகழ்வு
மேலும், அந்த பூங்கொத்தில் மிர்ட்டில், ரோஸ்மேரி, ஆங்கில ஓக் மலர்கள் இருந்தன. ரோஸ்மேரி மலர்கள் ராணியின் மகிழ்ச்சியான நினைவுறு குறிக்கிறது. அதேபோல இதில் மிர்ட்டில் பூக்களும் வைக்கப்பட்டு இருந்தன. அவை ராணி மறைந்த இளவரசர் பிலிப்பை 1947இல் மணந்தபோது இருந்த பூங்கொத்தில் இருந்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது ஆகும். அதேபோல அன்பின் வலிமைக்காக இங்கிலாந்து ஓக் பூவும் வைக்கப்பட்டு இருந்தது.
மலர்கள்
ராணி எலிசபெத் உயிரிழந்தது முதல் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் நாள் வரை ராணியின் சவபெட்டியில் அவருக்கு பிடித்தவை இருக்க வேண்டும் என்பதை அரச குடும்பம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக எந்தெந்த பூக்கள் வைக்கப்பட வேண்டும் என்பது வரை அரசு குடும்ப உறுப்பினர்களே நேரடியாகத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ராணிக்குப் பிடித்த டஹ்லியாஸ், ஸ்வீட் பீஸ், ஃப்ளாக்ஸ், ஒயிட் ஹீத்தர், பைன் ஃபிர் உள்ளிட்ட மலர்களால் செய்யப்பட்ட மாலையால் சவப்பெட்டி அலங்கரிக்கப்பட்டது.