ரிஷி சுனக்கை கைவிடும் சொந்த கட்சியினர்.. கடுங்கோபத்தில் பிரிட்டன் மக்கள்! பெரிய பின்னடைவு! என்னாச்சு
லண்டன்: பிரிட்டனில் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சொந்த கட்சி எம்பிகளே அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் தங்கள் எம்பி பதவியைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர்.
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். அவர் பதவிக்கு வந்ததை இந்தியாவில் உள்ள பலரும் கொண்டாடித் தீர்த்தனர். இளம் வயது பிரதமர், பதவிக்கு வந்த முதல் இந்து என பல்வேறு சிறப்புகளை அவர் கொண்டிருக்கிறார்.
இருப்பினும், அவர் இப்போது இக்கட்டான ஒரு சூழலில் பிரதமர் பதவிக்கு வந்துள்ளார். அந்நாட்டின் பொருளாதாரம் ரொம்பவே மோசமாக உள்ளது. இதனால் பொருளாதாரத்தைக் காக்க அவர் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பிரிட்டன்
இருந்த போதிலும், இன்னும் பிரச்சினை முடியவில்லை. கொரோனா காரணமாகப் பிரிட்டன் பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. உக்ரைன் போர் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியது. இந்தச் சூழலில் சில வாரங்கள் மட்டுமே பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் அறிவித்த வரிச் சலுகைகள் பொருளாதாரத்தை மேலும் மிக மோசமான நிலைமைக்குத் தள்ளியது. இதன் காரணமாகப் பிரிட்டன் பொருளாதாரம் சமீப காலத்தில் சந்திக்காத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் அங்குப் பொருளாதார மந்த நிலை ஏற்படவும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.

அதிருப்தி டூ கோபம்
பிரிட்டன் மக்களின் வாழ்க்கைத் தரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் அரசின் மீது பிரிட்டன் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஏற்கனவே சில மாதங்களில் 3 பிரதமர்கள் மாறியுள்ளது அந்நாட்டு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொருளாதார சூழலும் கோபத்தை அதிகரித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடைய வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். இதனால் பெரும்பாலான கன்சர்வேடிவ் கட்சி எம்பிகள் மீண்டும் தங்கள் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை.

நம்பிக்கை இழந்த எம்பிகள்
மாறாக, அவர்கள் கன்சர்வேடிவ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் போட்டியிட ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். அங்கு அடுத்த தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இருந்த போதிலும், மக்கள் கோபம் குறைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த கன்சர்வேடிவ் எம்பிகள் தொகுதியை மாறி கன்சர்வேடிவ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக இப்போதே சீட் மாறுவது தொடர்பாக அவர்கள் கட்சித் தலைமையை நச்சரிக்க தொடங்கிவிட்டனராம். இதனால் இப்போது கன்சர்வேட்டிவ் அதிகம் உள்ள தொகுதிகளின் எம்பிக்களுக்கு அவர்கள் இடம் மீண்டும் கிடைப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

எழும் விமர்சங்கள்
அடுத்த தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும் கூட, ரிஷி சுனக்கால் அதற்குள் நிலைமையை மாற்ற முடியாது என்று சொந்தக் கட்சி எம்பிகளே நினைக்கிறார்கள். இதனால் தான் அவர்கள் எம்பி சீட்களையே மாறுகிறார்கள். இதை அங்கு எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சியும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது. ரிஷி சுனக் மீதும் அவரது அரசின் மீதும் நம்பிக்கை இல்லாமலேயே சொந்தக் கட்சி எம்பிகளே தங்கள் இடங்களை மாற முடிவு செய்துள்ளதாகத் தொழிலாளர் கட்சி கட்சி சாடியுள்ளது. அரசியல் வல்லுநர்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது. தொகுதி மாறி போட்டியிடுவது மக்களுக்கு நம்பிக்கை தராது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் ஆதரவு இல்லை
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வரும் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி வெல்வது ரொம்பவே கடினம் தான். கருத்து கணிப்புகளிலும் அப்படியே இருக்கிறது. கடந்தாண்டு வரை ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாகவே இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடுமையாகச் சரி தொடங்கியது. முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் தொழிலாளர் கட்சிக்கு 47% மக்கள் ஆதரவு உள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கிற்கு வெறும் 25% மக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களித்தவர்களும் கூட அவர்கள் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

இக்கட்டான பிரச்சினை
பொருளாதாரம் அங்கு அந்தளவுக்கு மோசமாக உள்ளது. விலைவாசியும் உயர்ந்து வருகிறது. இதனால் பிரிட்டன் மக்கள் இக்கட்டான சூழலில் உள்ளனர். குறிப்பாக வயதானவர்கள், அதாவது பல ஆண்டுகள் உழைத்து இப்போது ஓய்வூதியம் பெறுபவர்கள் பிரச்சினையில் உள்ளனர். பிரிட்டனில் தனியார்த் துறையில் பணியாற்றியவர்களுக்கும் அரசே ஓய்வூதியம் கிடைக்கும். இதற்காக அவர்கள் பணிக் காலத்திலேயே குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவை பங்குச் சந்தையிலும், அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். இப்போது அந்நாட்டின் அரசு கடன் பத்திரங்களின் நிலையும் மோசமாக உள்ளது.

முக்கிய வாக்கு வங்கி காலி
வயதானவர்களுக்கு இந்த கடன் பத்திரங்களில் இருந்து தான் ஓய்வூதியம் கிடைக்கும். இதன் காரணமாக ஓய்வூதியமும் கணிசமாகக் குறைந்துள்ளது. பிரிட்டனில் இப்போது கடும் குளிர் நிலவி வரும் நிலையில், அறையை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள ஹீட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவதில்லை. மின் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ஓய்வூதியமும் குறைந்துள்ளதால் செலவுகள் அதிகம் என்பதால் ஹீட்டர் கூட அவர்களால் பயன்படுத்த முடிவதில்லை. பொதுவாக வயதானவர்களும் வெள்ளை இன மக்களுக்கும் தான் கன்சவர்வேட்டிவ் கட்சியின் முக்கிய ஆதரவாளர்கள்.

வாய்ப்புகள் குறைவு
அவர்களே அரசின் மீது கோபத்தில் உள்ளதாலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள போதிலும், ரிஷி சுனக்கால் அதற்குள் நிலைமையை தலைகீழாக மாற்றும் வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. இதில் சொந்தக் கட்சி எம்பிக்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதாலேயே அவர்கள் கட்சி மாறி போட்டியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications