பாஜகவில் இணைந்த "தம்பி மனைவி.." ஒற்றை வரியில் கலாய்த்த அகிலேஷ் யாதவ்!
லக்னோ: உத்திரபிரதேச மாநில தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது ஒன்றுவிட்ட தம்பி மனைவி அபர்ணா யாதவ் பாஜகவுக்கு தாவியுள்ளதற்கு பதிலளித்துள்ள அகிலேஷ் யாதவ், தங்களால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க முடியாதவர்களுக்கு தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் பாஜகவுக்கு நன்றி என கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அந்த மாநிலத்துக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போதைய ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைப்பதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என அகிலேஷ் யாதவ் பாஜகவுக்கு இணையாக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

பாஜகவுக்கு தாவிய முலாயம் மருமகள்
ஆளும் கட்சியான பாஜகவில் இருந்து ஏராளமான அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மற்றொரு மனைவிக்கு பிறந்த மகனான பிரதீப் யாதவின் மனைவி அபர்னாவும் பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் லக்னோ கண்டோன்மெண்ட் தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் ரீட்டா பகுகுணாவிடம் தோல்வியடைந்த அவர், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அகிலேஷ் கிண்டல்
இது உபி தேர்தலில் பல வியூகங்களை வகுத்து வைத்திருந்த அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. ஆனால் குடும்ப நாடகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தனது ட்ரேட்மார்க் நகைச்சுவையுடன் எங்கள் சித்தாந்தத்தை பாஜகவுக்கு அபர்ணா யாதவ் கொண்டு செல்வார் என்று நம்புவதாகவும், எங்களால் கூட டிக்கெட் கொடுக்க முடியாதவர்களுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதற்கு தான் பாஜகவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்துள்ளார்.

அரசியல் சிந்தாந்தம்
இது தொடர்பாக அவர் பேசுகையில் நான் அவரை வாழ்த்த விரும்புகிறேன் சமாஜ்வாதி கட்சியின் சித்தாந்தம் வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் எங்கள் சித்தாந்தம் பாஜகவுக்கு சென்று ஜனநாயகத்தை பரப்பும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என கூறிய அவர், வெகுஜன அடித்தளம் உள்ளவர்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இன்றைய இழப்பை ஒப்பிடுகையில் தான் அரசியல் ரீதியாக பலம் பெற்றுள்ளதாகவும், நாங்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பதற்கு சில உள் ஆய்வுகளை எடுத்துக் கொண்டிருந்தோம், அது எங்களுக்கு கை கொடுக்கும் என கூறியுள்ளார்.

பாஜகவுக்கு கேள்வி
மேலும், தான் ராணுவப் பள்ளியில் படித்தவர் என்றும், தன்னுடன் படித்தவர்கள் பலர் இப்போது நமது எல்லைகளை பாதுகாத்து வருகின்றனர், எனது மூத்தவர்கள் பலர் புகழ் பெற்ற ராணுவ வாழ்க்கையை கொண்டுள்ளனர், பாஜகவின் உயர்மட்ட தலைமை ஒரு உதாரணத்தையாவது இப்படி கொடுக்க முடியுமா? அவர்கள் வகுப்பு தோழர்கள் ராணுவத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தேசியவாதத்தின் வரையறை என்ன? விமானப்படை விமானங்கள் தரையிறங்கிய இடத்தில் நாங்கள் ஒரு அதிவேக நெடுஞ்சாலையை உருவாக்கவில்லையா? என்றும் சரமாரியாக கேள்விகளை அகிலேஷ் யாதவ் எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications