தொழுகைக்காக மசூதிகளில் ஒலிப் பெருக்கி.. அடிப்படை உரிமை இல்லை! உத்தரவிட்ட அலகாபாத் நீதிமன்றம்..!
லக்னோ : மசூதியில் ஒலிபெருக்கிகள் பொருத்த உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிபெருக்கியில் பாங்கு முழங்குவது அடிப்படை உரிமை அல்ல என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மசூதிகளில் தொழுகையின் போது 'அஸான்' பாங்கு முழக்க ஒலிபெருக்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே இந்த விவகாரத்தை கையிலெடுத்தார்.
அதன் பின்னர் தான் மற்ற மாநிலங்களிலும் இந்த விவகாரம் பேசு பொருளாகியது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்திலும் பரவிய இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மசூதிகளில் ஒலிப்பெருக்கி
அம்மாநிலத்தில் மசூதிகள், கோயில்கள், குருத்துவாராக்கள் உள்ளிட்ட அனைத்து மததலங்களின் ஒலிபெருக்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஒலிபெருக்கிகளின் ஓசைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளன. அனுமதியின்றி விதிகளுக்கு முரணாகப் பொருத்தப்பட்ட சில ஆயிரம் ஒலிபெருக்கிகள் மதத்தலங்களிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் வழக்கு
இதனால், சுமுகமாக முடிந்து வரும் நடவடிக்கைக்கு இடையே, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் பதான்யூவின் நூர் மசூதியின் முத்தவல்லியான மவுல்வி இர்பான் என்பவர் இம்மனுவை அளித்திருந்தார். இம்மனுவில் தம் மசூதியில் பாங்கு முழக்கத்திற்காக ஒலிபெருக்கிகளை பொருத்த அனுமதிக்கும்படி கோரியிருந்தார்.

அலகாபாத் நீதிமன்றம்
முன்னதாக மவுல்வி இர்பான், இந்த அனுமதியை தனது தாலுகாவான பிசவுலி துணை ஆட்சியரிடம் கோரியிருந்தார். இதற்கு அவர் அனுமதி அளிக்க மறுக்கவே, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இம்மனு, அலகாபாத் நீதிபதிகளின் அமர்வான நீதிபதி விவேக் குமார் பிர்லா மற்றும் நீதிபதி விகாஸ் பாத்வாரிடம் விசாரணைக்கு வந்தது.

மனு தள்ளுபடி
இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதற்கான காரணமாக, ''ஒலிபெருக்கிகளில் பாங்கு முழக்கம் என்பது அடிப்படை உரிமை அல்ல'' என நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது. தம் மனுவிற்கு சாதகமாக மவுல்வி இர்பான் தரப்பு முன்வைத்த வாதங்களும் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications