ராகுலுக்கு ஃபுல் சப்போர்ட்.. அயோத்தி ராமர் கோயில் செயலாளரும் "திடீர்" பாராட்டு! ஆஹா என்னங்க நடக்குது
லக்னோ: பாரத் ஜடோ யாத்திரை உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த முயற்சியை பாராட்ட வேண்டும் என்று அயோத்தியின் ராம ஜென்மபூமி கோயிலின் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட பாரத் ஜடோ யாத்திரை தற்போது உத்தரப் பிரதேசத்தில் 109 நாளை இன்று எட்டியிருக்கிறது. தற்போது வரை சுமார் 47 மாவட்டங்கள் 10 மாநிலங்களை யாத்திரை கடந்து வந்துள்ளது. வரும் 5ம் தேதியுடன் உத்தரப் பிரதேசத்தில் இந்த யாத்திரை முடிவடைகிறது. இதனையடுத்து ஹரியானா செல்கிறது.
இவ்வாறு இருக்கையில் இந்த யாத்திரையை பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி யாத்திரையை கைவிட வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி இருந்தது. இதற்கு பதிலளித்த காங்கிரஸ், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றோவோம். ஆனால், யாத்திரையை ஒத்தி வைக்க மாட்டோம் என்று கூறியிருந்தது. இந்நிலையில்தான் அயோத்தியின் ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி, சத்யேந்திர தாஸ், ராகுல் காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
4 மாவட்டம்.. 150 கிமீ.. 6 நாட்கள்! ஹரியானாவில் காங்கிரஸ் மாஸ் பிளான்.. கைகொடுக்குமா ராகுல் யாத்திரை?
ஆசி
உத்தரப் பிரதேசத்தில் யாத்திரை நுழைந்த போது அதில் பங்கேற்க வேண்டும் என்று கோரி பூசாரிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு கடிதம் வழியாக பதிலளித்திருந்த அயோத்தியின் ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ், ராகுல் காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நீங்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொண்டுள்ள பணியானது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. உங்களுக்கு கடவுள் ராமரின் ஆசி எப்போதும் உடன் இருக்கட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
விமர்சனம்
ஆனால் இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. விஷ்வ இந்து பர்ஷித் அயோத்தியின் தலைவரான சரத் சர்மா, இந்த கடிதத்திற்கு கடும் கண்டம் தெரிவித்திருந்தார். இவ்வாறு கடிதம் எழுதப்பட்டிருக்கக்கூடாது என்று கூறியிருந்தார். அதேபோல ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவரும் இந்த யாத்திரையில் பங்கேற்றிருந்த நிலையில், இது பாஜகவுக்கு இரு கடும் நெருக்கடியயை ஏற்படுத்தி இருந்தது. யாத்திரை தொடக்கத்தில் காங்கிரஸை கண்டுகொள்ளாமல் இருந்த பாஜக, நாட்கள் செல்ல செல்ல யாத்திரை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
அதிருப்தி
இந்நிலையில் அயோத்தியின் ராம ஜென்மபூமி கோயிலின் செயலாளர் சம்பத் ராய், ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "ராகுல் காந்தியின் முயற்சியை பாராட்டுகிறேன். அதில் தவறேதும் இல்லை. நாட்டுக்காக நடந்தே பயணிக்கிறார். பாரத் ஜடோ யாத்திரையை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் விமர்சித்ததில்லை. இந்த கடுமையான காலநிலையிலும் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது" என்று கூறியுள்ளார். இது பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை கிளப்பி இருக்கிறது.
எதிர்க்கட்சிகள்
முன்னதாக டெல்லில் செய்தியாளர்களுக்கு ராகுல் பேட்டியளித்தபோது, ஏன் எதிர்க்கட்சியினர் அதிக அளவில் யாத்திரையில் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித் அவர், "இந்த யாத்திரை அனைவருக்கும் பொதுவானதுதான். வன்முறை வெறுப்புணர்வு இல்லாத நாட்டை உருவாக்க நினைக்கும் யார் வேண்டுமானாலும் இந்த யாத்திரையில் பங்கேற்கலாம். அவர்களுக்காக எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும். மட்டுமல்லாது, தற்போதைய அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் எங்களுடன் இந்த யாத்திரையில் முழுமையாக கைகோர்க்கவில்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.