மயங்கிய மாப்பிள்ளை.. கழன்று விழுந்த விக்.. அதிர்ச்சியில் திருமணத்தை நிறுத்திய மணமகள்!
திருமணச் சடங்கின் போது மாப்பிள்ளை தலையில் இருந்து விக் கழன்று விழுந்ததால், மணமகள் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: மணமகனின் தலையில் தலை முடி இல்லை, விக் வைத்து ஏமாற்றினார் என்ற காரணத்திற்காக உத்தரப்பிரதேசத்தில் மணமகள் திருமணத்தையே நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆண்கள் தலையில் முடி இல்லாததை கேலி செய்வதும் பாலியல் துன்புறுத்தலே என சமீபத்தில் இங்கிலாந்தில் தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு அளித்தது. அந்தளவிற்கு உலகம் முழுவதும் இந்த தலைமுடி பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர், தலையில் முடி கொட்டுகிறதே என நினைத்து நினைத்தே மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அந்தளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
திருமணத்திற்குப் பிறகு முடி கொட்டினால்கூட ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் திருமணம் வரை முடியைப் பாதுகாப்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் கவலையே. இதை உண்மை என நிரூபிப்பதுபோல், தலையில் முடி இல்லை என்ற காரணத்திற்காக மணமகள் திருமணத்தையே நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
திருமண ஊர்வலம்
உத்தரப்பிரதேச மாநிலம் சஃபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள பரியார் என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுக்கும், கான்பூர் நகர் பகுதியைச் சேர்ந்த பங்கஜ் என்பவருக்கும் கடந்த 20ம் தேதி திருமணம் செய்ய பெரியவர்கள் நிச்சயம் செய்திருந்தனர். அந்த ஊர் வழக்கப்படி, மாலையில் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்துள்ளது.
மாப்பிள்ளை மயக்கம்
ஊர்வலம் முடிந்ததும், சோர்வாக இருந்த மாப்பிள்ளை திடீரென மேடையில் மயங்கி விழுந்துள்ளார். அவரது மயக்கத்தை தெளிவிப்பதற்காக மணமகளின் சகோதரர்கள், மணமகனின் முகத்தில் நீரைத் தெளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மணமகனின் தலையில் இருந்த தலைப்பாகை கழன்று விட்டது.
மணமகள் அதிர்ச்சி
அப்போது தான் மாப்பிள்ளைக்குத் தலையில் முடி இல்லை என்பது மணமகளுக்கும், அங்கிருந்த மற்ற உறவினர்களுக்கும் தெரிய வந்துள்ளது. இதைப் பார்த்து மணமகள் வீட்டார் அதிர்ச்சியில் இருக்க, உறவினர்களோ சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மணமகள், அந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
பிரச்சினை
இது தொடர்பாக இருதரப்பு உறவினர்களும் பேச்சுவார்த்தை நடத்த, அது முடிவில் வாக்குவாதமாக மாறி விட்டது. தலையில் முடி இல்லை என்பதைவிட, அதை தங்களிடம் மறைத்து மணமகனும், அவர்களது உறவினர்களும் தங்களை ஏமாற்றி விட்டதாக மணமகள் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, திருமண ஏற்பாட்டிற்கான செலவை திரும்பத் தரக் கேட்டு மணமகள் வீட்டார் பிரச்சினை செய்துள்ளனர்.
போலீஸ் தலையீடு
இரவு ஆரம்பித்த இந்தப் பிரச்சினை மறுநாள் காலை வரை நீடிக்கவே, இறுதியில் போலீசார் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்துள்ளனர். நடைபெறாத அந்தத் திருமணத்திற்கு மணமகள் வீட்டார் செலவு செய்த தொகையான ரூ. 5.66 லட்சத்தை மணமகன் வீட்டார் தந்த பிறகே, மணமகள் வீட்டார் சமாதானம் ஆகியுள்ளனர். திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்த வீடு, விக் பிரச்சினையால் திருமணம் நின்று சோகமயமானது.
அக அழகே முக்கியம்
புற அழகு என்பது எப்போதுமே நிரந்தரமானதல்ல.. அக அகழே என்றும் நல்லது என்ற புரிதல் பெரும்பான்மையானோர்க்கு இருப்பதில்லை. இந்த சம்பவத்திலும் தலையில் முடி இல்லை என்பதைவிட, அந்த உண்மையைக் கூறாமல் ஏமாற்றி விட்டனரே என்பதாலேயே பிரச்சினை இந்தளவுக்கு சென்றுள்ளது. ஒருவேளை ஆரம்பத்திலேயே மணமகன் வீட்டார் உண்மையைக்கூறி இருந்தால், திருமணம் இனிதே நடந்திருக்குமோ என்னவோ..