பிரதமருக்கு நன்றி..மக்கள் ஆசி பாஜகவுக்கு இருக்கிறது..உ.பி வெற்றியை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் பேச்சு!
லக்னோ : பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுக்காகவும், உபிக்கு அவர் அறிவித்த அனைத்து நலத்திட்டங்களுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பாஜகவுக்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கிறது என தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
Recommended Video
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் முன்னிலையும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. இதையடுத்து யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

அமோக வெற்றி
உ.பி., தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பாஜக தலைவர்கள் லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஹோலி கொண்டாடி, கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய யோகி , " அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உ.பி. முழுவதும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் உ.பி.யில் இன்று பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளது. உ.பி., மக்கள் இந்த வெற்றியை உறுதி செய்துள்ளனர். மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

பிரதமருக்கு நன்றி
முதன்முறையாக 7 கட்ட தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் இருந்தபோதிலும் இந்தத் தேர்தல் சுமூகமாக நடந்ததை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுக்காகவும், உ.பி.க்கு அவர் அறிவித்த அனைத்து நலத்திட்டங்களுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவுக்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கிறது . சப்கா சாத், சப்கே விகாஸ், சப்கா விஸ்வாஸ். இந்த பொன்மொழியை மேலும் எடுத்துச் செல்வோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்துள்ளோம்

அயராது உழைத்தோம்
2024-ல் பாஜக மகத்தான வெற்றியை உறுதி செய்யும். கோவிட்-19 காலத்திலும், நாங்கள் அயராது உழைத்தோம் . மாநிலத்தின் பரந்த தன்மையைக் கருத்தில் கொண்டு, உ.பி.யின் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. பெரும்பான்மையுடன் எங்களை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் உ.பி., கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைப்போம்

நாம் அதிர்ஷ்டசாலிகள்
பிரதமர் மோடியின் தலைமையில் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு உணவளித்துள்ளோம். ஏழைகளுக்கு காப்பீட்டுத் திட்டங்களை உறுதி செய்துள்ளோம். COVID-19 தொற்றுநோய்களின் போது, லட்சக்கணக்கான மக்களுக்கு நாங்கள் ரேஷன் வழங்கினோம். நாங்கள் ஓய்வின்றி உழைத்த போது, எங்களுக்கு எதிராக ஒரு பிரசாரம் நடந்தது. எனினும் நாங்கள் கடுமையாக உழைத்து அவை அனைத்தும் தவறு என்பதை நிரூபித்தோம். இன்று, உ.பி.யில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் காட்டியுள்ளனர். உலகிலேயே சிறந்த தலைவர் - பிரதமர் நரேந்திர மோடி கிடைத்ததற்கு நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். அவரது தலைமையில் உ.பி., மாநிலம் முதலிடத்தில் இருக்கும்," என பேசினார்.












Click it and Unblock the Notifications