முஹம்மது நபி பற்றி பாஜக பிரமுகர் அவதூறு.. உ.பியில் மதக்கலவரம் - புல்டோசர் வரும் என போலீஸ் எச்சரிக்கை
லக்னோ: இஸ்லாமியர்களின் தூதரான முஹம்மது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சியில் தெரிவித்த அவதூறு கருத்தால் உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையே மதக் கலவரம் வெடித்துள்ளது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இஸ்லாமியர்களின் கடைசி தூதரான முஹம்மது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கலவரம்
அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக உருவெடுத்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர். இரு தரப்பு மோதலை தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

போலீஸ் தடியடி
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து கலவர பகுதிக்கு சென்ற போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர். தொடர்ந்து மோதல் குறையாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த இடமே கலவரமயமாக காட்சியளித்தது.

36 பேர் கைது
இந்த கலவரம் தொடர்பாக 36 பேரை முதல்கட்டமாக போலீசார் கைது செய்து இருக்கின்றனர். ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 40 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், வன்முறை மீண்டும் மூளாமல் தவிர்க்கவும் ஆயுதம் தாங்கிய சிறப்பு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

புல்டோசர் வரும்
இதுகுறித்து தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச காவல்துறை, கலவரம் ஏற்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.











Click it and Unblock the Notifications