தாஜ்மஹால் எங்க இடம்.. செத்துப் போன மன்னர் ஷாஜஹான் மீது பாஜக பெண் எம்.பி. திடீர் நில அபகரிப்பு புகார்
லக்னோ: உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிற தாஜ்மஹால் எங்கள் பரம்பரைக்கு சொந்தமான நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது; மறைந்த மன்னர் ஷாஜஹான் எங்கள் நிலத்தை அபகரித்து தாஜ்மஹாலை கட்டியிருக்கிறார் என்று பாஜகவின் பெண் எம்.பி தியாகுமாரி திடீர் நில அபகரிப்பு புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய துணைக்கண்டமானது எண்ணற்ற சாம்ராஜ்யங்களை எதிர்கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் முகாலயப் பேரரசு. இஸ்லாம் மதத்தைக் கடைபிடித்த முகாலயப் பேரரசை நிறுவியவர் பாபர். அவரைத் தொடர்ந்து ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர் வரிசையில் வருபவர்தான் ஷாஜஹான். இவரது மகன் அவுரங்கசீப்.
ஷாஜஹான் தமது ஆட்சிக் காலத்தில் அதாவது கி.பி.1631-ல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்ட தொடங்கியதுதான் இன்றைக்கும் உலக அதிசயமாக திகழும் தாஜ்மஹால். இந்த நினைவுச் சின்னம் 22,000 தொழிலாளர்களால் சுமார் 22 ஆண்டுகள் கட்டப்பட்டு கி.பி.1653-ல் முடிவடைந்தது. 1700களின் தொடக்கத்தில் முகலாயப் பேரரசு சிதறுண்டு வீழ்ந்து போனது.

தாஜ்மஹால் சர்ச்சை
அப்போது இந்தியாவில் கால் பதித்த ஐரோப்பியர் தொடங்கி நாடு விடுதலைக்குப் பின்புவரை தாஜ்மஹால் ஒரு போற்றுதலுக்குரிய நினைவுச்சின்னமாக திகழ்கிறது. ஆனால் விடுதலை இந்தியாவில் வலதுசாரி சித்தாந்தம் வேர்பிடிக்க தொடங்கியது முதலே தாஜ்மஹால் தொடர்பான சர்ச்சைகளும் நீடிக்கின்றன. தாஜ்மஹால் ஒரு சிவன் ஆலயத்தின் மீதே கட்டமைக்கப்பட்டது; தாஜ்மஹால் ஒரு இந்து ஆலயம் என்பதுதான் வலதுசாரிகளின் வாதம். இது தொடர்பாக இந்திய நீதிமன்றங்கள் வழக்குகளையும் எதிர்கொண்டிருக்கின்றன.

பாஜக எம்பி தியாகுமாரி
இதன் ஒரு அம்சமாக சில நாட்களுக்கு முன்னர் பாஜகவின் ரஜ்னீஷ்சிங் என்பவர், தாஜ்மஹால் இந்து ஆலயம். அதில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளை தொல்லியல் துறை திறந்து ஆய்வுநடத்த வேண்டும் என்று ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பாஜக பெண் எம்.பி. தியாகுமாரி அதிரடியான ஒரு புகாரை முன்வைத்துள்ளார்.

ஷாஜஹான் மீது புகார்
பாஜக பெண் எம்.பி. தியாகுமாரி, ஜெய்ப்பூர் அரச பரம்பரை சேர்ந்த இளவரசி என உரிமை கொண்டாடுகிறவர். அத்துடன் தற்போது தாஜ்மஹால் அமைந்துள்ள இடத்தை என் மூதாதையர்களிடம் இருந்துதான் ஷாஜஹான் அபகரித்தார். இதற்கான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தாஜ்மஹால் அமைந்துள்ள இடத்தை ஆக்கிரமித்த ஷாஜஹான் எங்கள் மூதாதையருக்கு இழப்பீடு கொடுத்தார் எனவும் சொல்கின்றனர். ஆனால் அது குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை. அந்த காலத்தில் நீதிமன்றம் இல்லை; ஆகையால் மேல்முறையீடு செய்யவில்லை என அதிரடியாக கூறியுள்ளார். அதாவது மறைந்து போன முகாலய மன்னர் ஷாஜஹான் மீது நில அபகரிப்பு புகாரை இப்போது சொல்கிறார் பாஜக எம்.பி.தியாகுமாரி.

ராமர் மகனின் பரம்பரை
எற்கனவே இன்னொரு சர்ச்சையில் சிக்கியவர்தான் இந்த தியாகுமாரி. அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் பூதாகரமாக வெடித்த தருணங்கள், ஜெய்ப்பூர் அரச பரம்பரை என்பதே கடவுள் ராமர் பெற்றெடுத்த மகனின் வாரிசுகள்தான். இதற்கு தேவையான ஆதாரங்கள் எல்லாம் தேவைப்படுகிற நேரத்தில் ரிலீஸ் செய்வோம் என கூறி அதிரவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications