சண்டையால் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி.. சமாதானப்படுத்தி அழைத்துவர 3 நாள் லீவ் கேட்ட அரசு ஊழியர்!
லக்னோ: தன்னிடம் கோபித்து கொண்டு மனைவி, பேரக்குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை சமானப்படுத்தி அழைத்து வருவதற்காக கல்வித்துறை ஊழியர் ஒருவர் 3 நாள் விடுப்பு கேட்டு எழுதிய கடிதம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரசு பணி முதல் தனியார் பணி வரை அனைத்து ஊழியர்களும் வாரம் ஒருமுறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐடி உள்ளிட்ட சில நிறுவனங்களில் வாரம் 2 முறை விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர உடல் நலக்குறைவு, சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை காரணமாக கூறியும் ஊழியர்கள் விடுப்பு எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதில் உண்மையான காரணத்தை பலர் கூறினாலும் ஏராளமானவர்கள் பொய்யாக உடல் நலக்குறைவு எனக்கூறி இன்றும் விடுப்பு எடுத்து வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் லீவ்? வெளியான முக்கிய அறிவிப்பு
பேசும் பொருளான விடுப்பு கடிதம்
இதுதவிர நம்பியார் கால டெக்னிக்கான பாட்டி இறந்துவிட்டார். தாத்தா மறைந்துவிட்டார் எனக்கூறி இன்று வரை பலர் போலி காரணங்களை கூறி விடுமுறை எடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் கூட சில சந்தர்ப்பங்களில் சிலர் தெரிவிக்கும் காரணங்கள் விசித்திரமாக இருக்கும். சிலரது காரணங்கள் சிரிப்பை வரவழைக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில் தற்போது ஒருவர் விடுப்பு கேட்டு எழுதிய கடிதம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கல்வித்துறையில் பணி
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வசித்து வருபவர் ஷம்ஷத் அகமது. இவர் கல்வித்துறையில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப விஷயம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து அவரது மனைவி கோபமடைந்தார்.
தாய் வீட்டுக்கு சென்ற மனைவி
மேலும் மகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் அவர் தான் பிறந்த வீட்டுக்கு சென்றார். இதனால் மனம் உடைந்த ஷம்ஷத் அகமது கோபித்து கொண்டு சென்ற தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தார். இதற்காக விடுப்பு கேட்டு அவர் தனது உயரதிகாரிக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் தான் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
விடுப்பு கடிதத்தில் இருப்பது என்ன?
ஷம்ஷத் அகமது எழுதிய கடிதத்தில், ‛‛குடும்ப விஷயம் தொடர்பான பிரச்சனையில் என் மனைவி என்னுடன் இல்லை. அவர் அவரது தாய் வீட்டுக்கு கோபித்து சென்றுவிட்டார். இதனால் மனரீதியாக உடைந்துவிட்டேன். என் மனைவியை அழைத்து வர ஆகஸ்ட் 4 ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை விடுப்பு வேண்டும்'' என கூறியுள்ளார்.
பாராட்டிய நெட்டிசன்கள்
இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஷம்ஷத் அகமது நினைத்தால் பொய்யான காரணத்தை கூறி விடுப்பு கேட்டு இருக்கலாம். ஆனால் அவர் நேர்மையாக உண்மையான காரணத்தை கூறி விடுப்பு கேட்டுள்ளார் என நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதேபோல் தான் ஷம்ஷத் அகமதுவின் உயரதிகாரியும் அவரை பாராட்டி அவரது விடுப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
இதன்மூலம் ஷம்ஷத் அகமதுவுக்கு 3 நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் கல்வித்துறையில் ஊழியர் ஒருவர் விடுப்பு கோரிய கடிதம் எப்படி இணையதளங்களில் வெளியானது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்.