பெரும் பதற்றம்.. பூதாகரமாகும் எடுக்கும் கிருஷ்ணஜென்ம பூமி! உபி ஈத்கா மசூதியை அளவிட நீதிமன்றம் ஆணை
லக்னோ: பாபர் மசூதியை ராமஜென்ம பூமி என்று உரிமைகோரி வந்த இந்துத்துவ அமைப்புகள், மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை கிருஷ்ண ஜென்ம பூமி என்று உரிமைகோரி வரும் நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை போல் ஈத்கா மசூதியிலும் அதிகாரப்பூர்வ அளவீட்டை நடத்த மதுரா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
முகலாய மன்னர் பாபரால் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பழம்பெரும் பாபர் மசூதியை ராம ஜென்ம பூமி என்று இந்துத்துவ அமைப்புகள் உரிமை கோரி வந்தனர். இதனை தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இந்துத்துவாவினரால் தகர்க்கப்பட்டது.
இதன் காரணமாக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. இந்த நிலையில் பாபர் மசூதி நிலத்தை ராம ஜென்ம பூமி அரக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு கோயிலுக்காக பாபர் மசூதி நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டது.

அடுத்த மசூதிகளுக்கு குறி
இந்த தீர்ப்பு வெளியான உடனே தங்களின் அடுத்த இலக்கு என சில மசூதிகளை பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் சுட்டிக்காட்டி வந்தன. அதில் முக்கியமாக பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள ஞான்வாபி மசூதியையும், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஈத்கா மசூதியையும் அவர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

ஞானவாபி மசூதி
அதை மெய்பிக்கும் வகையில் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் அவர்களால் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வாரணாசி நீதிமன்ற உத்தரவின்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு அதில் சிவலிங்கம் போன்ற வடிவம் இருந்ததாக கூறி அதற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈத்கா மசூதி
இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள 17 ஆம் நூற்றாண்டில் முகலாய அரசர் அவுரங்கசீபால் கட்டப்பட்ட பழமையான ஈத்கா மசூதி இருக்கும் இடம் கிருஷ்ணர் பிறந்தது எனக்கூறி இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவரால் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தொல்லியல்துறை ஆய்வுக்கு உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறது. ஜனவரி 2 ஆம் தேதி தொல்லியல் துறை ஆய்வுக்கு ஆணையிட்ட மதுரா நீதிமன்றம், ஜனவரி 20 ஆம் தேதி ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அன்றைய தினம் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்து உள்ளது.

மதுராவில் பதற்றம்
கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், இந்த மதுரா ஈத்கா மசூதியில் அகில பாரதிய இந்து மகா சபா அமைப்பு, ஹனுமன் சலிசா பாடலை பாடுவதற்கு அழைப்பு விடுத்தது. இதனை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மதுராவில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications