காசியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.. மேயர்கள் மாநாட்டில் கிளாஸ் எடுத்த பிரதமர் மோடி
லக்னோ: நாட்டில் உள்ள அனைத்து மேயர்களும் தங்கள் நகரங்களை தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும் எனவும், எவ்வாறு என்பதை காசி போன்ற இடங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் நகர்புற மேம்பாட்டு துறை சார்பில் அகில இந்திய மேயர்கள் மாநாடு நடைபெற்றது . புதிய நகர்புற இந்தியா என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த மேயர்கள், உத்தரபிரதேச முதல்வர் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் அந்த அகில இந்திய மேயர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் இந்திய நகரங்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

பிரகாசமான எதிர்காலம்
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இங்கிருக்கும் அனைத்து மேயர்களும் தங்கள் நகரின் பிரகாசமான எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்கு எந்த தடைக் கற்களையும் விட்டு வைக்கவில்லை என்று தான் நம்புவதாகவும், காசியில் நடைபெறும் இந்தத் திட்டம் இந்தியாவில் நகரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என கூறினார் . மேலும் காசியின் வளர்ச்சி என்பது நாட்டின் பல நகரங்களுக்கு ஒரு உதாரணமாக திகழ்வதாகக் கூறினார்.

காசியில் இருந்து கற்றுக் கொள்ளலாம்
நமது நகரங்களில் பெரும்பாலானவை பாரம்பரிய நகரங்கள் அவைகளின் வளர்ச்சியும் பாரம்பரிய முறையிலேயே உள்ளதாகவும் காசி போன்ற இடங்களில் இருந்து நாம் இதனை கற்றுக் கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாட்டில் உள்ள அனைத்து மேயர்களும் தங்கள் நகரங்களை தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாம் பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வேண்டும் இந்தியாவிற்கு இன்று புரட்சி தேவையில்லை நமது பாரம்பரிய கட்டிடங்களை இடித்து புனரமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மாறாக அவற்றை புத்துயிர் பெறும் வகையில் உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.

யோகி ஆதித்யநாத் பாராட்டு
காசியின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாராட்டினார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தொகுதியை பிரதிநிதித்துவத்தில் வாரணாசி மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என்றும் உலகின் மிகவும் தொலைநோக்கு மற்றும் பிரபலமான தலைவரான அவர் வாரணாசி தொகுதியை பிரதிநிதி படுத்துவதில் காசி மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள் எனவும் , கடந்த 7 ஆண்டுகளில் காசியின் வளர்ச்சியில் புதிய அளவுகோல்களை நிறுவியுள்ளது எனவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

பிரதமர் அலுவலகம்
இந்நிலையில் நகரங்களின் வளர்ச்சி குறித்த் ஒரு அறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது அதில், நகர்ப்புறங்களில் எளிதாக வாழ்வதை உறுதிசெய்வது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும் என்றும், பாழடைந்த நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பல திட்டங்களையும் முயற்சிகளையும் தொடங்கியுள்ளது என்றும், இந்த முயற்சிகளின் சிறப்பு கவனம் உத்தரபிரதேச மாநிலம் ஆகும் எனவும், இது நகர்ப்புற நிலப்பரப்பில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications