உடுக்கை அடித்து உற்சாகமான பிரதமர் மோடி..வாரணாசியில் அனல் பறந்த பிரச்சாரம்..7ஆம் கட்ட தேர்தல் பரபர..!
லக்னோ : உத்திரப்பிரதேச 7ஆம் கட்ட தேர்தலையொட்டி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வநாத் தாம் கோயிலில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த உடுக்கையை பக்தர்கள் மற்றும் கட்சியினர் முன்னிலையில் உற்சாகமாக அடித்து காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
இந்நிலையில் மாநிலத்தில் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் உத்திர பிரதேச தேர்தலில் தனித்தனியாக பலப் பரிட்சை நடத்துகின்றன.

உத்திரபிரதேச தேர்தல்
உத்திரபிரதேசத்தில் அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தலையொட்டி மத்திய மாநில பொது நிறுவனங்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்காக மார்ச் 7ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி மாவட்டத்தில் உள்ள வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கான்ட் ஆகிய தொகுதிகளுக்கு ஏழாவது கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் வெள்ளிக்கிழமை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரம்மாண்ட பேரணி
வாரணாசியில் உள்ள மால்தாஹியா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் தனது சாலைப் பயணத்தை தொடங்கினார். தொடந்து அந்த பேரணி விஸ்வநாத் தாமில் நிறைவடைந்தது. வாரணாசியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் சாலை பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பேரணிக்குப் பிறகு, பிரதமர் மோடி விஸ்வநாத் தாம் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

உடுக்கை அடித்த பிரதமர்
இதையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கோவிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி கோயில் வளாகத்தை சுற்றி பார்த்து பிரார்த்தனை நடத்தினார். அந்த கோவிலில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த உடுக்கையை பார்த்த மோடி அதனை பக்தர்கள் மற்றும் கட்சியினர் முன்னிலையில் உற்சாகமாக அடித்து காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications