நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்க சூப்பர் திட்டம்! அசத்தி காட்டிய உத்தரப் பிரதேச மின்வாரியம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்க அமல்படுத்தப்பட்ட திட்டம் நல்ல பலனை கொடுத்திருப்பதாகவும், மின்சார வாரியத்திற்கு லாபத்தை ஈட்டி கொடுத்திருப்பதாகவும் உத்தரப் பிரதேச அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்காகவும், மின் திருட்டில் ஈடுபட்டு அபராதம் கட்டாமல் இருப்பவர்களுக்காகவும் அம்மாநில அரசு ஓடிஎஸ் எனும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை 54 நாட்களில் மூன்று கட்டங்களாக மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டம் நவம்பர் 8 முதல் நவம்பர் 30 வரை நடைபெற்றது, இரண்டாவது கட்டம் தற்போது டிசம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. மூன்றாம் கட்டம் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை நடைபெறும்.

இப்படியாக உத்தரப் பிரதேச மின்சார வாரியம் ரூ.2,615.48 கோடி வரை வசூலித்திருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இவை அனைத்தும் நிலுவையில் இருந்த கட்டணங்கள். முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தலின் பேரில் ஓடிஎஸ் திட்டம் மூலம் தற்போது இந்த தொகை திரும்ப மின்சார வாரியத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்த நிதியை கோண்டு புதிய மின் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும். இதுவரை மின்சாரமே சென்று சேராத கிராமங்களுக்கு கூட உ.பி மின்சார வாரியம் வெற்றிகரமாக மின் இணைப்பை கொண்டு சேர்த்திருக்கிறது.
மட்டுமல்லாது விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், தொழில் துறையினருக்கு சலுகை விலையில் மின்சாரம் போன்ற திட்டங்களை மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அடுத்த கட்டமாக மரபு வழி மின் உற்பத்தியிலிருந்து விலகி, சூரிய மின் சக்தி, காற்றாலை மின் உற்பத்தியை நோக்கி மாநில அரசு நகர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் மாசில்லா வழியில் மின் உற்பத்தியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சாத்தியமாக்கிடும்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications