சட்டசபை தேர்தல்: உ.பி. யோகி ஆதித்யநாத்துக்கு செக்- துணை முதல்வராக்கி களமிறக்கப்படும் ஏ.கே. சர்மா
லக்னோ: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடியின் வலதுகரமான ஏ.கே. சர்மா களமிறக்கப்பட உள்ளார். ஏ.கே. சர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படக் கூடும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பாஜகவிலேயே கடும் அதிருப்தி உள்ளது.
குறிப்பாக கொரோனா பரவலை தடுக்கும் விவகாரத்தில் நாட்டிலேயே மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அதுவும் மயான வசதிகள் கூட இல்லாமல் கங்கை உள்ளிட்ட நதிகளில் சடலங்கள் ஆயிரக்கணக்கில் தூக்கிவீசப்பட்ட பேரவலமும் யோகியின் ஆட்சியில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
காத்திருக்கும் பின்னடைவு
இதே முகத்துடன் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டால் நிச்சயம் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவுதான் என்பதில் அந்த கட்சியினருக்கே கூட சந்தேகம் இல்லை. இதனால் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களில் பாஜக இப்போதே களமிறங்கிவிட்டது. ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து உத்தரப்பிரதேசத்தில் முகாமிட்டு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
துணை முதல்வராகும் சர்மா
இதன் ஒருபகுதியாக தற்போதைய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதிருப்தியில் இருக்கும் ஜாதியினரை சமாதானப்படுத்தும் வகையிலும் ஓரிருநாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் தற்போதைய எம்.எல்.சி.யான மோடியின் பிரதிநிதியாக கருதப்படும் ஏ.கே. சர்மா, துணை முதல்வராக்கப்படும் நிலை உள்ளது.
குஜராத் சர்மா?
குஜராத் மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கே.சர்மா. குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது அவருடைய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். பின்னர் பணி ஓய்வு பெற்றுக் கொண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த உடனேயே எம்.எல்.சி. பதவி கொடுக்கப்பட்டது. அப்போதே யோகிக்கு செக் வைக்கும் வகையில்தான் ஏ.கே. சர்மா களமிறக்கப்படுகிறார் என்றே சொல்லப்பட்டது.
பாஜகவின் வியூகம்
தற்போது யோகி ஆதித்யநாத்தை மாற்றம் செய்யாமலேயே சர்மாவை களமிறக்கி நிலைமையை சரி செய்ய முடியும் என கணக்குப் போட்டுள்ளது பாஜக. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக் கிடப்பதால் இந்த அதிருப்திகளுக்கு மத்தியில் பாஜக எளிதாக வெல்ல முடியும் என்பது யோகி ஆதித்யநாத் ஆதரவாளர்களின் கருத்தாகவும் உள்ளது.