வாரணாசியில் வைத்து.. மம்தாவுக்கு கறுப்பு கொடி காட்டிய பாஜக.. அனல் பறக்கும் உத்தரப்பிரதேசம்!
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக வாரணாசி வந்த மம்தா பானர்ஜிக்கு பாஜகவினர் கறுப்பு கொடி காட்டியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் 6வது கட்ட தேர்தல் இன்று நடந்துகொண்டிருக்கிறது.
7ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற்று, ஒரே கட்டமாக மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் சமாஜ்வாதியை ஆதரித்து இன்று வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்டார் மம்தா பானர்ஜி.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. அங்கு சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தேர்தல் என்பதால், உத்தரப்பிரதேச தேர்தலை நாடே உற்று நோக்கி வருகிறது.

மம்தா பேனர்ஜி
சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்கிறார். இன்று வாரணாசியில் அக்கட்சியை ஆதரித்து பேரணியில் கலந்து கொண்டார். அதற்கான கொல்கத்தாவில் இருந்து வாரணாசிக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து பேரணி நடக்கும் இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கறுப்புக்கொடி
அப்போது மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பாஜகவினர் கறுப்புக்கொடி காட்டினர். அங்கிருந்து பேரணி நடக்கும் இடத்துக்கு வந்தார் மம்தா. அவர் பேசுகையில், ''நான் வந்த எல்லா இடத்திலும் எனக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள். அது எதிர்ப்புக் கொடி இல்லை. அவர்கள் இந்த தேர்தலில் தோற்கப்போவதற்கான பயத்தின் அறிகுறி.

சமாஜ்வாதி
அடுத்த பேரணியிலும் மம்தாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட பாஜகவினர் தயாரானதால், சமாஜ்வாதி கட்சியினர் அவருக்கு ஆதராவாக சாலைகளில் திரண்டனர். இரு தரப்பையும் போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர். மம்தா பானர்ஜி ஏற்கெனவே சமாஜ்வாதியை ஆதரித்து உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தற்போது இரண்டாவது முறையாக பிரசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications