"சமாஜ்வாதிக்கு எதிராக வாக்களியுங்கள்னு போன்ல மிரட்டுறாங்க.. விட மாட்டோம்.. " அகிலேஷ் யாதவ் திடுக்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு ஓவைசி மீதான தாக்குதல் உதாரணம்: அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர பிரசாரத்தை துரிதப்படுத்தி வருகிறது. அதேபோல், சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளும் பலத்த போட்டியைத் தருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது.
சமாஜ்வாதி கட்சி
கடந்த தேர்தலில் பாஜக-விடம் தோற்ற சமாஜ்வாதி, இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட நினைக்கிறது. ஆட்சியில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மந்திரிகளை தங்கள் கட்சிக்குள் அழைத்துவந்தது. ஓபிசி ஓட்டுகளைப் பெற தொடர் பிரசாரம் செய்வது, குறிப்பிட்ட ஜாதிக் கட்சி என்ற பெயரை மாற்ற போராடுவது என பல மாற்றங்களை இந்தத் தேர்தலில் செய்துவருகிறது சமாஜ்வாதி கட்சி.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவின் தீவிர பிரசாரத்தால், உத்தரப்பிரதேச பாஜக கலக்கத்தில் இருக்கிறது. அவர்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது பாஜக. பாகிஸ்தான், ஜின்னா ஆதரவாளர், குண்டர்கள் கட்சி என்று சமாஜ்வாதியை குற்றம்சாட்டி வருகிறது பாஜக. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், நேற்று ஆக்ராவில் பிரசாரம் மேற்கொண்டாா்.
பிரசாரம்
அகிலேஷ் பேசுகையில், ''உத்தரப்பிரதேச சட்டசபைத் தோ்தலில் சமாஜ்வாதி கட்சி சக்திவாய்ந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது. இதனால் சமாஜ்வாதிக்கு எதிராக வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது. அதுபோன்ற அழைப்பு வந்தால், அவற்றை பொதுமக்கள் பதிவு செய்து வைத்துக்கொள்ளவும். சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தபின், அந்த அழைப்புகளை ஆதாரமாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்யப்படும்.
பாஜக
இந்தியாவில் பாஜகவால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். பணமதிப்பிழப்பை ஒரே நாளில் அவர்களால் கொண்டு வர முடியும். ஆனால் அது நமக்கு முன்கூட்டியே தெரியாது. இந்தத் தேர்தல் உத்தர பிரதேசத்தின் எதிா்காலத்துக்காகவும், நாட்டின் அரசியலமைப்பை காக்கவும் நடைபெறும் தேர்தல். மக்கள் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்'' என்று பிரசாரத்தில் பேசினார்.