எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அகிலேஷ் யாதவ்? - மிகப்பெரிய முடிவுக்கு காரணம் இதுவா?
லக்னோ: நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால், கர்ஹால் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி 2017ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மிக மோசமாக தோற்றது. அதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக பிரசாரம் செய்தது சமாஜ்வாதி கட்சி. ஆனாலும் பாஜகவிடம் தோற்று, ஆட்சி அமைக்கமுடியாமல் போனது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற நான்கு மாநிலத்தில் பாஜகவும் ஆட்சி அமைக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.

அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி கூட்டணி 403 தொகுதிகளில் 126 தொகுதிகளில் வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சி பலமாக உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராஜினாமா
அகிலேஷ் யாதப் ராஜினாமா செய்கிறார் என்ற செய்தி கேட்டு அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏவாக பதவி ஏற்கும் முன்னரே இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது. சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்காமல் தோற்றதால், இந்த முடிவை எடுப்பதாக சொல்லப்பட்டாலும், அதுமட்டுமே காரணம் இல்லை என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

காரணம் என்ன?
அகிலேஷ் யாதவ் தற்போது அஸாம்கர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். சட்டசபை உறுப்பினராக தன்னுடைய பயணத்தை தொடர விரும்பாத அகிலேஷ் யாதவ், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகவே தொடர விரும்புகிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.

மம்தா பானர்ஜி
2024 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸுடன் சேர்ந்து சந்திக்க தயார் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் உத்தரப்பிரதேச தோல்வி கண்டு துவண்டுபோக வேண்டாம் என அகிலேஷ் யாதவுக்கு மம்தா ஆறுதல் கூறியுள்ளார். மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால், அதில் அகிலேஷ் யாதவ் முக்கிய நபராக இருப்பார். அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமல், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். பொதுத்தேர்தலை மனதில் வைத்து, இப்போதே அதற்கு தயாராகும் வேலையில் அகிலேஷ் யாதவ் இறங்கிவிட்டதாக அறியப்படுகிறது.












Click it and Unblock the Notifications