மனைவியை தாக்கி கொடுமை - உபி பாஜக பிரமுகர் கைது.. வரதட்சனையாக ”கார்” கேட்டு கறார்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வரதட்சனையாக கார் வாங்கிக்கேட்டு மனைவியை தாக்கிய புகாரில் அம்மாநில பாஜக நிர்வாகியை போலீஸ் கைது செய்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் புதாவுன் மாவட்டம் சதார் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் ஆதிஃப் நிஜாமி. பாஜக சிறுபான்மை பிரிவு பகுதி துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
இவர், தனது மனைவி கஹ்காசன் பாத்திமாவிடம் வரதட்சனையாக கார் வாங்கிக் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மனைவி வரதட்சனை புகார்
இந்த நிலையில், சதார் கோட்வாலி காவல் நிலையத்தில் கஹ்காசன் பாத்திமா புகார் ஒன்றை அளித்தார். அதில் ஆதிஃப் நிஜாமி தன்னிடம் கார் கேட்டு தாக்கியதாக கூறியுள்ளார். அவரளித்த புகாரின் அடிப்படையில் ஆதிஃப் நிஜாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளதாக புதாவுன் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரவீன் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.

மாமியார் மீது புகார்
ஆதிஃப் நிஜாமி மட்டுமின்றி அவரது தாய் ரஃபாத் ஜஹான் எனப்படும் மீனா மீதும் கஹ்காசன் பாத்திமா வரதட்சனை புகாரை அளித்திருக்கிறார். கடந்த 27 ஆம் தேதி வரதட்சனை கேட்டு தன்னை கொடூரமாக இருவரும் தாக்கியதாக அவர் புகாரளித்து உள்ளார். தனது புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்திருப்பதாக கஹ்காசன் பாத்திமா கூறியுள்ளார்.

அரசியல் அழுத்தம்
பாஜக பிரமுகர் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது மனைவி கஹ்காசன் பாத்திமா மாவட்ட நீதிமன்றத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை தனது கணவர் ஆதிஃப் நிஜாமி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியதாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போலீஸ் உறுதி
அதே நேரம் தனது மனைவி கஹ்காசன் பாத்திமா காவல் நிலையத்தில் அளித்து உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பிரமுகர் ஆதிஃப் நிஜாமி மறுப்பு தெரிவித்து இருக்கிறார். உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரவீன் சிங் சவுஹான் உறுதியளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications