இரண்டாவது முறை முதல்வரானதும்.. முதல் கேபினட் கூட்டத்தில் யோகி எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 2வது முறையாக நேற்று யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து இன்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மாநிலத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தை 3 மாதம் நீட்டிப்பு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் 18 இடங்களில் வென்றன.
இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று மாலை யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்று கொண்டார்.

மோடி பங்கேற்பு
பிரமாண்டமாக நடந்த இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பாஜக முன்னணி தலைவர்களும், பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இதையடுத்து 52 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வர்களாக செயல்படுவர். மொத்தத்தில் 18 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 1 4 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும், 20 இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.

அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் லக்னோ லோக்பவனில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் திட்டத்தை 3 மாதம் வரை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இத்திட்ட நீட்டிப்புக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

15 கோடி மக்கள் பயன்
இதுபற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‛‛பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை மார்ச்31ல் இருந்து ஜூன்30 வரை நீட்டிப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் மாநிலத்தில் 15 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். முதல் அமைச்சரவை கூட்டத்தின் முதல் முடிவான இது வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்படும்'' என்றார்.

ஏழைகளின் நலன்...
இதுகுறித்து துணை முதல்வர் பிரஜேஷ் பதாக் கூறுகையில், ‛‛உத்தர பிரதேசத்தில் மேலும் 3 மாதம் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். இத்திட்டம் கொரோனா பரவல் அதிகமான 2020ம் ஆண்டில் இருந்து உத்தர பிரதேசத்தில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications