என்னங்க சொல்றீங்க?.. அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷமா?.. ஷாக்.. அலறும் உ.பி. போலீஸார்
லக்னோ: உத்தரபிரதேச டிஜிபி அலுவலக்திற்கு சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு போலீஸார் டீ வழங்கிய போது அதை குடிக்க அவர் மறுத்துவிட்டார்.
"யோகி ஆதித்தயநாத்தின் கைப்பாவையாக இருக்கும் உங்கள் (போலீஸ்) மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த டீயில் விஷம் கூட கலந்திருப்பீர்கள்" என அகிலேஷ் யாதவ் கூறியது பெரும் பரபரபபை ஏற்படுத்தியது.
இதனால் போலீஸ் உயரதிகாரிகளுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து அகிலேஷ் கோபமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.

குறிவைக்கப்படும் சமாஜ்வாதி கட்சியினர்
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாக சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, முஸ்லிம் மீதான அடக்குமுறைகள், பாஜகவினர் செய்யும் குற்றங்கள் போன்றவற்றை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அகிலேஷ் யாதவ் தனியாக ஒரு ஐ.டி. விங்கை (IT wing) நடத்தி வருகிறார். இது சமீபகாலமாக பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள், அக்கட்சியின் ஐடி விங் ஊழியர்கள் ஆகியோரை குறிவைத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

அகிலேஷுக்கு நெருக்கமானவரை தூக்கிய போலீஸ்
இந்த சூழலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமாஜ்வாதி கட்சி நிர்வாகியான மணீஷ் ஜெகன் அகர்வால் கடந்த வாரம் சில விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் மீது அவதூறு பரப்புவதாக கூறி அவரை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணீஷ் அகர்வால் அகிலேஷ் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.

டிஜிபி அலுவலகம் சென்ற அகிலேஷ்
மணீஷ் அகர்வால் கைது செய்யப்பட்டது அகிலேஷ் யாதவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மணீஷ் அகர்வாலை விடுவிக்காவிட்டால் பெரிய அளவில் சமாஜ்வாதி போராட்டம் நடத்தும் எனவும் அவர் எச்சரித்தார். ஆனால், மணீஷ் அகர்வாலை போலீஸார் விடுவிக்கவில்லை. இந்நிலையில், தனது கட்சி நிர்வாகிகளுடன் லக்னோவில் உள்ள உ.பி. டிஜிபி அலுவலகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றார்.

"டீயில் விஷம் கலந்திருப்பீர்கள்"
அப்போது மணீஷ் அகர்வால் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுடன் அகிலேஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு போலீஸார் டீ கொடுத்துள்ளனர். ஆனால், அதை வாங்க மறுத்த அகிலேஷ் யாதவ், "யோகி ஆதித்யநாத்தின் கைப்பாவையான நீங்கள், இந்த டீயில் விஷம் கலந்திருப்பீர்கள். நான் இந்த டீயை குடிக்க மாட்டேன்" என்றார். இதனால் காவல் உயரதிகாரிகளுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது. பின்னர் அங்கிருந்து கோபமாக அகிலேஷ் யாதவ் வெளியேறினார்.












Click it and Unblock the Notifications