சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு அதிக அளவில் கடன்! உத்தரப் பிரதேச அரசு புதிய சாதனை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் முனைவோர்களுக்கு ரூ.50,000 கோடியை மாநில அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் எம்எஸ்எம்இ துறையில் அதிக அளவு கடன் கொடுத்த மாநிலம் என்கிற பெருமையை உ.பி பெற்றுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இப்படியாக இவர் அறிவித்த பல திட்டங்களில் முக்கியமானதுதான் எம்எஸ்எம்இ துறைக்கான கடன் வழங்கும் திட்டம். இது குறித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோரை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாக கொண்டிருக்கிறோம்.
கடந்த 6 ஆண்டுகளில், ரூ.66,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.9 லட்சம் கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு மட்டும் ரூ.16,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி புதிய உத்தரப் பிரதேசம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் பாரம்பரிய நிறுவனங்களுக்காக எங்கள் அரசாங்கம் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (ODOP) திட்டத்தைத் தொடங்கியது.
இது ஒரு புதுமையான முயற்சியாகும். மாநிலத்தின் திறமையான இளைஞர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்குவது, முதலீட்டிற்கான சிறந்த இடமாக உத்தரபிரதேசத்தை நிறுவுவது என்பதுதான் இத்திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி அங்கீகரித்துள்ளார். தற்போது இதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேசத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் முனைவோர்களுக்கு ரூ.50,000 கோடியை மாநில அரசு வழங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications