குண்டும் குழியுமாக உள்ள சாலைகளுக்கு முடிவு.. துறை சார்ந்த அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாலைகளை வரும் தீபாவளிக்குள் மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் சாலை போக்குவரத்தை மேம்படுத்த சாலைகளை தரமானதாக மாற்ற பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்குள் உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"இந்த ஆண்டு பருவமழை வழக்கத்திற்கு மாறாக பெய்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் மழை தீவிரமாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றார்போல சாலைகளை தயார் செய்ய வேண்டியது அந்தந்த துறையின் பொறுப்பாகும். குறிப்பாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் பொதுப்பணித்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மண்டி பரிஷத், நீர்ப்பாசனம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், சர்க்கரை தொழில் மற்றும் கரும்பு மேம்பாடு, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை பெரும்பாலும் சாமானியர்கள்தான் பயன்படுத்துகின்றனர். எனவே சாமானியர்களுக்கு சாலையில் பயணிப்பதை இனிமையான அனுபவமாக மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.
ஆகவே காலம் தாழ்த்தாமல் வரும் தீபாவளிக்குள் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் சரி செய்யப்பட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications