சிவபெருமான் பேசிய மொழி தமிழ்.. சமஸ்கிருதத்துக்கு இணையானது! தமிழர்கள் நம் விருந்தினர்கள் -யோகி பேச்சு
லக்னோ: சிவனின் திருவாயில் இருந்து வெளியான மொழி தமிழ் என்றும் அது சமஸ்கிருதத்திற்கு இணையானது எனவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசு நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டை அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இதன் ஒரு பகுதியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடத்தப்படும் இந்த காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, காசி தமிழ்நாடு இடையே உள்ள பண்டைய நாகரீக தொடர்பை உணர்த்தும் வகையில் ஒருங்கிணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பன்முகத் தன்மை
வரும் நவம்பர் 19 ஆம் தேதி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்குகிறது. நாட்டின் கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை மற்றும் கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களை இந்த சங்கமம் நிகழ்ச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
வாரணாசி மக்களவைத் தொகுதி உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வின் அமைப்பாளராக பாரதிய பாஷா சமிதி தலைவர் பத்மஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இன்று முதல் குழு
தமிழ்நாட்டில் இருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியர்கள், மாணவர்கள், ஆன்மீகவாதிகள், விவசாயிகள் என பலர் செல்கின்றனர். இதற்காக தமிழகத்திலிருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் 2,592 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

3 நகரங்கள்
அந்த வகையில் இன்று வாரணாசிக்கு ரயில் மூலம் தமிழ்நாட்டில் இருந்து முதல் குழு செல்ல உள்ளது. இன்று 216 பேர் ரயிலில் வாரணாசிக்கு அவர்கள் செல்ல உள்ளனர். திருச்சியில் இருந்து 103 பேரும், சென்னையில் இருந்து 78 பேரும், ராமேஸ்வரத்தில் இருந்து 35 பேரும் வாரணாசிக்கு செல்ல உள்ளனர்.

ஆளுநர் ரவி
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இக்குழுவினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடி கொடியசைத்து அவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த நிகழ்வில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்க இருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்
இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "சிவனின் திருவாயில் இருந்து வெளியான மொழி தமிழ். இது சமஸ்கிருதத்திற்கு இணையானது. தமிழ் மக்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியால் இந்த மாநிலத்துக்கே பெருமை. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் உயரிய விருந்தினர்கள். அவர்களுக்கு வசதி, பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்." என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications