காதலியை பழிவாங்க.. 7 அப்பாவி உயிர்களை காவு வாங்கிய காதலன்.. சிசிடிவி கேமரா மூலம் வெளிவந்த பயங்கரம்!
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் காதலி ஏமாற்றியதால் ஆத்திரத்தில் அவரது பைக்கிற்கு காதலன் தீ வைத்தபோது, தீ அருகிலிருந்த குடியிருப்புகளுக்கு பரவி 7 அப்பாவிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேறொரு நபரை காதலி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டததால் ஆத்திரமடைந்த காதலன் அவரை பழிவாங்க அவரது பைக்கிற்கு தீ வைத்துள்ளார்.
அப்போது தீ மளமளவென பரவி அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பரவியுள்ளது. இதில் 7 அப்பாவிகள் பரிதாபமாக பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். 9 பேர் தீயணைப்புப் படையினரால் போராடி காயங்களோடு மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குடியிருப்புப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பைக் நிறுத்துமிடத்தில் தீப்பற்ற வைக்கும் காட்சிகளை பார்த்து அதிர்ந்தனர்.

தீ வைத்த இளைஞன்
அந்த இளைஞர் ஒரு பைக்கில் தீயைப் பற்ற வைக்க, அது அங்கிருந்த அனைத்து வாகனங்களுக்கும் பரவி கட்டடமே தீக்கிரையாகியுள்ளது. இதையடுத்து தீ வைத்த சஞ்சய் தீட்சித் என்பவரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தன் காதலியை பழிவாங்கவே அவரது பைக்கிற்கு தீ வைத்ததாக சஞ்சய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிர்ச்சி வாக்குமூலம்
அந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணும் அந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். அப்பெண் திடீரென வீட்டில் பார்த்த நபரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் சஞ்சய் தான் செலவு செய்த பணத்தை அப்பெண்ணிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார்.
பணத்தைக் கொடுக்க முடியாது என அப்பெண்ணும், அவரது தாயாரும் மறுத்ததால் சஞ்சய் ஆத்திரமடைந்து, அப்பெண் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து காதலியின் பைக்கிற்கு தீ வைத்துள்ளார்.

அப்பாவிகள் பலி
அந்த தீ மளமளவென பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குடியிருப்பில் இருந்த 7 அப்பாவிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமுற்றனர். சஞ்சய்யின் காதலியான அப்பெண்ணும், அவரது தாயாரும் முன்னரே வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காதலியை பழிவாங்க காதலன் செய்த செயல் 7 அப்பாவிகளின் உயிரைக் காவு வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications