பாஜகவின் கூட்டணி கட்சிகள் பெட்டிஷன் கொடுத்தால் மட்டும் பத்தாது.. அமைச்சர் மூர்த்தி பொளேர் பேச்சு
மதுரை: பாஜகவோடு பழைய கூட்டணியில் இருப்பவர்கள் பெட்டிஷன் கொடுப்பது மட்டுமல்லாமல் மத்திய சர்க்காரிடம் தமிழ்நாட்டுக்கு தேவையான தடுப்பூசியை கேட்க வேண்டும் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் 200 படுக்கையுடன் கூடிய ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்.
மூர்த்தி ஆய்வு
அதனை தொடர்ந்து தற்போது 150 படுக்கையுடன் கூடிய ஆக்சிஜன் சிகிச்சை மையம் திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகளை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வலியுறுத்துவோம்
அப்போது அமைச்சரிடம் குறைந்த படுக்கையுடனாவது எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து முடிக்கும் படி மற்ற தலைவர்கள் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் மூர்த்தி, கேட்டுக் கொண்டே இருக்கிறோம் இன்னும் நிதி ஒதுக்கவில்லை. கொஞ்சமாக ஒதுக்கி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து முடிக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். தற்போது கொரோனா தடுப்பு பணியில் இருப்பதினால் பணிகளை முடித்து பின்னர் எய்ம்ஸ்
மருத்துவமனைக்கு தேவையான நிதிகளை தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம்.
மருத்துவ சிகிச்சை
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஆயிரத்து 1500 லிருந்து 700 ஆக குறைந்துவிட்டது. ஆனாலும் யாரும் பாதிக்கப்படக் கூடாது அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆக்சின் படுக்கைகள் போதுமானதாக மதுரை மாவட்டங்களில், கிராமப்புறங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 கோவிட் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னேற்பாடுகளும் மதுரை மாவட்ட ஆட்சியர் செய்துள்ளார். மேலும் தமிழக முதல்வரின் அறிக்கைப்படி எந்த குறையும் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பெட்டிசன் பத்தாது
தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கருத்து குறித்த கேள்விக்கு, அமைச்சர் பதில் அளிக்கும் போது, மாநில பாஜகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினுடைய முயற்சியில் மனநிறைவோடு மருத்துவ பணியாற்றி வருகிறார்கள். பழைய கூட்டணியில் இருப்பவர்களும் பெட்டிஷன் கொடுப்பது மட்டுமல்லாமல் மத்திய சர்க்காரிடம் தமிழ்நாட்டுக்கு தேவையானதை கேட்டால் நன்றாக இருக்கும். வந்தவரை அனைத்து தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இனி இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு தான் வரும் வந்தவுடன் அதுவும் பொது மக்களை சென்றடையும்" என்றார்