ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை.. தமிழக ஆளுநர் ரவி விவகாரத்தில் காங்கிரஸ்க்கு கொடுத்த பதிலடி
மதுரை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்றும் கூறினார்.
நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வந்த ஆர்.என்.ரவி, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவர் ஆவார். பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர்.

மத்திய அரசு பணி
1976இல் ஐபிஎஸ் ஆக ரவி சேர்ந்தார். கேரள கேடர் ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.

வடகிழக்கு மாநிலங்கள்
மத்திய புலனாய்வுத்துறையில் பணியாற்றிய போது சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக பல கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றினார். அந்த சமயத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார். உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது.

உள்நோக்கம் இல்லை
இந்நிலையில் நாகலாந்தில்இருந்து தமிழகத்திற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி இடமாற்றம் செய்யப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்பட பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் தமிழக ஆளுநர் ரவி நியமனத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேளாண்மை சட்டம்
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. வேளாண்மை சட்டங்களால் யாரும் இதுவரை பாதிப்படைந்ததாகக் கூறவில்லை. தமிழகம், பிஹாரில் மண்டி வைத்து வியாபாரம் செய்வதால் வேளாண்மை சட்டங்களை எதிர்க்கின்றனர். இதேபோல் சிஐஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை.
Recommended Video

அழகிரிக்கு பதிலடி
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுகிறார். இதற்கு முன்னர் பல மாநிலங்களில் ஐஏஎஸ்,ஐபிஎஸ் ஆக பணி புரிந்தவர்கள் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளனர். தமிழக ஆளுநர் ரவி, பிகாரில் பிறந்து கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுக்குப் பின்பு நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றியவர். அவரது நியமனத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. அதிமுக பாஜக உறவு அண்ணன், தம்பி உறவு" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications