இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் ராமர் மற்றும் லட்சுமணர் மாதிரி... சொல்வது அமைச்சர் உதயக்குமார்
முதல்வர் - துணை முதல்வருக்குமிடையே எந்தவித சர்ச்சையும் இல்லை. ஒருதாய் பிள்ளையாகவும், ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் துணை முதல்வர் இடையே எந்த சர்ச்சையும் இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். இருவரும் ஒருதாய் பிள்ளையாகவும், ராமர் லட்சுமணர் போலவும் உள்ளதாக கூறியுள்ளார் அமைச்சர் உதயகுமார்.
முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியாக இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தினசரியும் புது புது செய்திகள் வெளியாகி வருகிறது. அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக இணைந்து பங்கேற்பதில்லை என்ற புகார் எழுந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்வதில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்த புகாரை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மறுத்துள்ளார். இருவரும் முக்கிய முடிவுகளை இணைந்துதான் எடுக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிவித்தார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இணைந்து முதல்வரும் துணைமுதல்வரும் பங்கேற்றனர். காமராஜர் மணி மண்டபத்தில் இருவரும் இணைந்தே அஞ்சலி செலுத்தினர்.
இன்று மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கதர் ஆடை விற்பனையை துவக்கி வைத்தார்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..... அக். 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீர் ரத்து!
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தியடிகள் 2119 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட நிலையிலும் நாட்டிற்கு அஹிம்சையை கற்றுக்கொடுத்தவர். தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தியவர். பொறுமை, பெருந்தன்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லில் சொல்லாமல் செயலில் செயலாற்றி காட்டியவர் காந்திஜி எனவும் தெரிவித்தார்.
திமுகவுக்கு மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலி பானையாக அக்கட்சி உள்ளது. அதிமுகவில் ஆரோக்கியமான கருத்து ஒற்றுமை ஏற்பட்டு தேர்தலை சந்திப்போம் என்று கூறினார்.
முதல்வர் துணை முதல்வருக்குமிடையே எந்தவித சர்ச்சையும் இல்லை. ஒருதாய் பிள்ளையாகவும், ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள். வரும் 7ம் தேதி ஒருமித்த கருத்தோடு நல்ல தீர்ப்பை அறிவிப்பார்கள் என்றார். வரும் 7ம் தேதி தலைமை அறிவிக்கும் கருத்துக்கு ஒன்றரை கோடி தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். தனி ஒருவர் சொல்லும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.