சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் 2 பேரையும் போலீசார் கொடூரமாகத் தாக்கினார்..ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு
கொரோனா காலகட்டமாக இருந்ததால் சாத்தான் குளம் வழக்கு தாமதிக்கப்பட்டது. இனி எந்த தாமதமும் இருக்காது என்று சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
மதுரை : சாத்தான்குளம் விவகாரத்தில் காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. முக்கிய குற்றவாளிகளான ரகுகணேஷ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கொரோனா ஊரடங்கின்போது சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணை என்ற பெயரில் இருவரையும் போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ விசாரணை
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஜாமீன் கோரி மனு
இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்த போது, ரகு கணேஷிற்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொடூர தாக்குதல்
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள முழு சக்தியை கொண்டு தான் நாடு சுபிட்சமாக இயங்கி வருகிறது. காவல்துறை என்பதே மக்களை காப்பாற்றுவதற்கு தான். நாடு முழுவதும் நிம்மதியாக இரவு பொதுமக்கள் தூங்குவதற்கு காரணம் காவல்துறையினர் தான். ஆனால் சாத்தான்குளம் வழக்கில் அதற்கு மாறாக 2 நபர்கள் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.

சாட்சியங்கள் பதிவு
இதற்கு பல்வேறு சாட்சியங்கள் உள்ளன. தற்போது தான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான ரகுகணேஷ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே ரகு கணேஷிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது. சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார் உள்ளது,' என்று வாதிட்டார்.

ஜாமீன் வழங்க எதிர்ப்பு
அப்போது நீதிபதிகள், காலம் கடந்துவிட்டது. ஒரு வருடம் ஆகிய நிலையில், இனியும் ஜாமீன் வழங்காமல் இருக்க முடியாது என்று கூறினர். இதற்கு பதில் அளித்த சிபிஐ தரப்பு, கொரோனா காலகட்டமாக இருந்ததால் சாத்தான் குளம் வழக்கு தாமதிக்கப்பட்டது. இனி எந்த தாமதமும் இருக்காது. எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். தந்தை, மகன் கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வரும் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்குமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications