கோகுல்ராஜ் கொலை வழக்கு..உணர்வுகளின் அடிப்படையில் அல்ல..ஆதாரங்களின்படிதான் தீர்ப்பு - ஹைகோர்ட்
மதுரை : கோகுல் ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படமாட்டாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். கொலை தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக கோகுல்ராஜின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் இன்றைய தினத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தார் கோகுல்ராஜ். அவருடன் அவரது தோழியும் சென்றிருந்தார். அப்போது சிலர் அந்த பெண்ணை விரட்டி விட்டு கோகுல்ராஜை கடத்தி சென்றனர்.
சுவாதியை சந்தித்த கோகுல்ராஜ் கொலை..பிறழ் சாட்சியத்திற்கான காரணத்தை கூற வேண்டும்.. நீதிபதிகள் சாடல்
உறவினர்களும் பெற்றோர்களும் கோகுல்ராஜை தேடிய நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்பாதை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சுவாதி ஆஜரானார்.
அப்போது, பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, 'புத்தகம் மற்றும் குழந்தை மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள்' என நீதிபதிகள் கூறினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது. ஞாபகம் இல்லை என்று கூறினார். போலீசார் கூறியதால் சொன்னேன். எழுதிக் கொடுத்தேன் என்றும் சுவாதி பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், சுவாதி உண்மையை சொல்லாமல் மறுத்துவிட்டார். சிசிடிவி உள்ள பெண் அவராக இருந்தும் அதனை ஏற்காமல் சுவாதி மறுத்துவிட்டார். சுவாதி யாராலோ அழுத்தத்திற்கு ஆளாகி யாரையோ காப்பாற்ற இவ்வாறு கூறுகிறாரோ என நினைக்கிறோம். சாட்சிகள் உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சத்தியப்பிரமாணம் பெறப்படுகிறது. சுவாதியின் சாட்சி இந்த வழக்கில் முக்கியம். அவரை சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார். சத்தியப் பிரமாணம் செய்த பின் தவறான தகவலை அளிப்பவரை எளிதாக கடந்து சென்று விட முடியாது. நீதித்துறையை மாசுபடாமல் இருக்க தவறான தகவலை தருவோர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் நீதிபதிகள் கருத்து கூறியிருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகளும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கோகுல்ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல்ராஜை, யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் அழைத்து சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார். கோகுல் ராஜும், சுவாதியும் பேசிக் கொண்டிருந்த போது, தான் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தியதை தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
கோகுல்ராஜிடமிருந்து சுவாதியை பிரித்து அழைத்து செல்வதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், கோகுல்ராஜின் தற்கொலை வீடியோ என சொல்லப்படும் காணொலி குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போனில்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அதேபோல் இந்த வழக்கில் 5 பேரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.
இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், கோகுல்ராஜூடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தொடர்பான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தனர்.
இந்த வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். உணர்வுகள் அடிப்படையில் அல்ல எனவும் தெளிவுபடுத்தினர். இதைத்தொடர்ந்து, இது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக கோகுல்ராஜின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் இன்றைய தினத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்றைய தினம் கோகுல்ராஜின் பெற்றோர் தாக்கல் செய்யப்போகும் ஆதாரங்கள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.