தென் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை... பெருகிய வெள்ளம் - இன்றும் மழை நீடிக்கும்
தென் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் இன்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அ
மதுரை: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களை பருவமழை பதம் பார்த்துள்ளது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. வைகை, தாமிரபரணி ஆறுகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்திருந்தது.

வானிலை மையம் அறிவித்தது போல நேற்று மாலை முதலே பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மதுரை மாவட்டத்தில் காலை நேரத்தில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
மதுரை மாவட்டத்தில் தனக்கன் குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த வாரங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
வங்ககடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்றும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் ஒன்று தோன்றி இருப்பதாகவும் அந்த காற்றழுத்த தாழ்வு மையம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு மத்திய வங்கக் கடலை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பான்மையான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications