குலசேகரப்பட்டினம் தசரா விழா..ஆபாச பாடல்களை பாடி ஆட தடை..ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை என்பதை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்திய அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான். இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இவர்களில் பெரும்பாலானோர் விரதமிருந்து பல்வேறு வேடமணிந்து பங்கேற்பதுதான் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். ஏராளமான பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ள நிலையில் வேடமிடும் பொருட்களையும் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

குலசை தசரா திருவிழா
ஒவ்வொரு வருடமும் குலசை தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழா வரும் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த விழாவில் பாடல்களுக்கு நடனமாடுவதற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆபாச நடனங்கள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், கோயில் திருவிழாக்களில் ஆபாச பாடல்கள் இசைப்பதையும், ஆபாச நடனம் ஆடுவதையும் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் உத்தரவு
இந்த விழாவில் ஆபாச பாடல்கள் ஒளிபரப்பப்படவில்லை என தூத்துக்குடி எஸ்.பி மற்றும் தூத்துக்குடி ஆட்சியர் உறுதி செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோயில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதையும், ஆபாச பாடல் இசைப்பதையும் அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கண்டிப்பாக கூறியுள்ளனர்.

மகிஷாசூரசம்ஹாரம்
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, இந்த ஆண்டு வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்டோபம் 5ஆம் தேதி நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாச நடன அசைவுகள்
தமிழகத்தில் பல கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பல ஊர்களிலும் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடும் கலைஞர்கள் ஆபாச உடை அணிந்து நடனம் ஆடுகின்றனர். இது பலரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கும். இதனை தடுக்கும் வகையில் குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்களைப் பாடவும் நடனமாடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications