இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படும் - மதுரை கூட்டத்தில் சு.சுவாமி ஆரூடம்!
மதுரை: இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படப் போவதாக பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில், பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள். சுப்பிரமணியன் சுவாமியை வாழ்த்துப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து, விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசியபோது, சுதந்திரம் பெற்ற பிறகு, மெதுவாக இந்தியா சொந்த காலில் நிற்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் வரப் போகிறது. நாட்டின் காலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் அழித்ததால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம்.
தற்போது, அதிலிருந்து மீண்டு, சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம். இந்த நாட்டை யாரும் பிரிக்க முடியாது. ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமானால், பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும்.
தமிழர்கள் அறிவு உள்ளவர்கள். ஆனால், தைரியம் இல்லாதவர்கள். எனவே, புதிய தமிழர்களை உருவாக்க வேண்டும். என்னை ஏன் இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என வட மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். புதிய தமிழனை உருவாக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். ஆரியன், திராவிடன் என்ற வார்த்தை இல்லை. தமிழகத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தலில், ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும்.
இந்திய ராணுவத்தினரை கொலை செய்த விடுதலைப் புலிகளுக்கு இங்கே சிகிச்சை அளக்கக்கூடாது என நான் கூறினேன். அப்படி சிசிக்சை அளித்தால் ஆட்சி கலைக்கப்படும் எனவும் தெரிவித்தேன். அவ்வாறு எச்சரித்தும் கேட்காததால், கடந்த 1991-ம் ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அடுத்த 2 மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
தமிழகத்தில் உள்ள 22 கோயில்களில் டிரஸ்டிகளை நீக்கிவிட்டு, அந்தந்த கோயில்களில் என்ன பூஜை நடக்க வேண்டும் என பூசாரிகளே தீர்மானிக்க வேண்டும். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன் என, பிறந்த நாள் கூட்டத்தில், சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.