"கருப்பு ஆடுகள்.." ரேசன் அரிசி கடத்தலுக்கு காரணமே இவர்கள் தான்! உண்மையை உடைத்த ஜெ. ராதாகிருஷ்ணன்
மதுரை: ரேஷன் கடைகளில் ஆய்வு செய்த முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்ணே அது உண்மையாண்ணே? ஃபோன் மேல ஃபோன் போட்டாங்க! ஓபனாய் பேசிய தங்கமணி! என்னாச்சு தெரியுமா?
திடீர் ஆய்வு
மதுரை மாவட்டம் பெருங்குடியில் கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளில் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் வைக்கப்பட்ட அரிசின் தரம் பற்றி ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன் ரேசன் அரிசி கடத்தல் குறித்து முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார்.
ஜெ.ராதாகிருஷ்ணன்
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழக முதல்வர் ரேசன் கடைகளில் மக்களுக்குத் தரமான முறையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இருக்கும் ரேசன் கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 35,595 ரேசன் கடைகள் உள்ளன. மதுரையில் மட்டும் 1300+ ரேசன் கடைகள் உள்ளன.
ரேசன் கார்டுகள்
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 ரேசன் கடைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. அந்தியோதய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 18.64 லட்சம் ரேசன் கார்டுகள், 96.54 லட்சம் அரிசி ரேசன் கார்டுகள், 3.84 லட்சம் சர்க்கரை ரேசன் கார்டுகள், 60,056 கவுரவ ரேசன் கார்டுகள் இருக்கிறது. ரேசன் பொருட்களைச் சேமித்து வைப்பதில் எந்தவொரு பிரச்சினையும் இருப்பதில்லை.
சேமிப்பு கிடங்குகள்
கூடுதலாகத் தமிழ்நாட்டில் மொத்தம் 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்குகளைக் கட்டி வருகிறோம். இதன் மூலம் கூடுதலாக 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு தானியங்களைச் சேமிக்க முடியும். மதுரை தோப்பூரிலும் புதிய சேமிப்பு கிடங்கை கட்டி வருகிறோம். தமிழகத்தில் உள்ள 109 தார்பால் மூடிய திறந்தவெளி கொள்முதல் குடோன்களை முற்றிலும் மூடப்பட்ட குடோன்களாக (செமி கவர்) மாற்றப்படும். இதற்காக 233 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கடனுதவி
தமிழகத்தில் இதுவரை 836 கொள்முதல் நிலையங்களில் 2.97 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல விவசாயிகளுக்கு உதவும் வகையில் கடனும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மட்டும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 10,252 கோடிக்கு வேளாண்மை கடன், 40,000 கோடிக்கு தங்க நகைக் கடன், 10,000 கோடிக்கு மேல் சுழல் நிதி, சிறு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.67 ஆயிரம் கோடிக்கு விவசாயிகளுக்குக் கடன் வழங்கி உள்ளோம்.
கருப்பு ஆடுகள்
அரிசி கடத்தலைப் பொறுத்தவரை அதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 11,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, 11,121 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 113 பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. கூட்டுறவுத் துறையில் சில கருப்பு ஆடுகள் உள்ளதால் ரேஷன் அரிசி சட்டவிரோத கடத்தல் நடைபெறுகிறது.
நடவடிக்கை பாயும்
அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க துறை ரீதியாக 400 பேர் கொண்ட குழு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கடை திட்டத்தில் பொருட்கள் வழங்கவில்லை என்றால் அது தவறு! அதிலும் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.