அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி சன்னதி கதவுகள் திறப்பு..பூப்பல்லக்கில் வந்த கள்ளழகர்
மதுரை: அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Recommended Video
மதுரை மாவட்டம் அழகர்மலை ஆன்மிக பூமி. அடிவாரத்தில் அழகர்கோயில். மலையின் நடுவே முருகனின் அறுபடை வீடான பழமுதிர்ச்சோலை. உச்சியில் ராக்காயிகோயில் என உள்ளது. இங்கு காவல் தெய்வமாக நிற்பவர் பதினெட்டாம்படி கருப்பசாமி. இவரைப் பய பக்தியுடன் வணங்கினால் மனபயம் அகல்வதோடு சகல செல்வங்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமாலிருஞ்சோலை, அழகர் மலை, சோலைமலை என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் அழகர் கோவிலின் மூலவராய் அருள்பாலிக்கிறார் பரமஸ்வாமி. அங்கே உற்சவராக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள் பாலிக்கிறார் கள்ளழகர். இந்த அழகரையும், மலையையும் காவல் காத்து வருகிறார் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. இவருக்கு உருவம் இல்லை. மூடப்பட்ட கதவு குடம் குடமாய் ஊற்றி பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் அழகிய நிலை மாலை என கம்பீரமாக காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. மிகப்பெரிய அரிவாள் உள்ளது.
இன்று முதல் 3 நாள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றனும்! சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு
கருப்பண்ணசாமிக்கு அபிஷேகம்
கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் பரம்பரை பூசாரிகள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஈடுபட்டனர்.
அழகர் கோவில் தேரோட்டம்
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவில் ஒன்பதாம் நாள் திருவிழாவாக நேற்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட திருத்தேரோட்டம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று இரவு கள்ளழகர் கோயில் உள்ள காவல் தெய்வமான 18ம் படி கருப்பண்ணசாமி கோயில் சன்னதி கதவுகளுக்கு பரம்பரை பூசாரிகளால் சந்தனம் சாத்தப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டன.
கதவாக இருந்து காவல் காக்கும் கருப்பசாமி
பல ஊர்களில் கையில் அரிவாளுடன் காவல் தெய்வமாக காத்திருக்கும் கருப்பசாமி அழகர் கோவிலில் அருவமாக கதவாக இருந்து கோவிலை பாதுகாத்து வருகிறார். அழகர் கோவிலில் தரிசனம் முடிந்த உடன் ஆலயம் மூடியதும் சாவியை அழகர்கோயில் சந்நிதியில் வைத்து வழிபடுவார்களாம்.
அழகர் கோவில் சொத்துக்களுக்கு காவல்
அழகர்கோயில் சொத்துகள் பெரும் களஞ்சியத்தைப் போன்றவை. அற்புதமான சொக்கத்தங்கத்தால் ஆனவர் கள்ளழகர். 'அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது' என்ற சொலவடை மதுரைப் பகுதிகளில் பிரசித்தம். கோவிலின் பெரும் செல்வத்தை காவல் காத்து வருகிறார் கருப்பசாமி. அழகருக்கு அபிஷேகம் செய்ய நூபுர கங்கைத் தீர்த்தமே தினமும் கொண்டுவரப்படும். கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.
அழகரின் நகைகள்
சித்திரைத் திருவிழாவுக்குப் அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நிதிக்கு எழுந்தருளுவார் கள்ளழகர். அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்பு கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும்.
நீதி தெய்வம் கருப்பண்ணசாமி
கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர். கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் பல வழக்குகள் அவர் முன்பு தீர்க்கப்பட்டு வருகின்றன.
திறக்கப்படும் கதவுகள்
ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமி நாளில் கருப்பண்ணசாமி கோவில் கதவுகள் திறக்கப்படும். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. 18 படிகளாக உருமாறி உள்ள இந்த சன்னதியில் 18 சித்தர்களுக்கும் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூப்பல்லக்கில் கள்ளழகர்
இதனைத்தொடர்ந்து கள்ளழகர் பெருமாள் பதினெட்டாம் படி சன்னதி முன்பு பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகர் பெருமானை வழிபட்டனர். நேற்றைய தினம் கருப்பண்ணசாமிக்கு ஏராளமானோர் கிடா வெட்டி படையலிட்டு அன்னதானம் செய்தனர்.