ஆளை விடுங்க.. பேட்டி கொடுத்தா.. வேட்டிய உருவி விட்ருவீங்க.. அவசரமாக கிளம்பிய மதுரை ஆதீனம்
மதுரை: தொழில் வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், பேட்டி கொடுத்தா வேட்டியவே உருவி விட்ருவங்க என செய்தியாளர்களிடம் பதிலளித்து சென்றுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் மதுரை மாவட்டம் பரவையில் நடைபெற்ற ஆகாஷ் கிளப் மஹாலில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துறவியர் மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பேசிய மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், "தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களைத் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கின்றனர்.
ததமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துகளைக் குத்தகை மற்றும் வாடைக்கு விட்டுள்ளனர். இருப்பினும், இதற்கான வாடகை தொகை முறையாக வருவதில்லை. இது குறித்து ஏதாவது கேள்வி கேட்டால் ஏதோ பிரச்சினை செய்கிறோம் என்ற ரீதியில் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ராவும் அடிக்க முடியாது. இந்துக்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். இது குறித்துத் தான் நான் பிரதமர் மோடியிடம் பேசினேன் என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு அமைச்சர் சேகர் பாபு , மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும். தன்னைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதற்காக இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். அரசியல்வாதியாக செயல்படுகிறார். நாங்களும் எகிறி அடிக்க முடியும். ஆனால், அது நன்றாக இருக்காது என அமைதி காக்கிறோம் என்று பதிலளித்தார். இதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதுமட்டுமல்லாமல் மதுரை ஆதீனம் குறித்து திமுக தரப்பில் கடுமையான விமர்சனமும் செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் வெள்ளாளர் மற்றும் முதலியார் சேம்பர் இணைந்து நடத்திய தொழில் வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் சைக்கிள் பனை ஓலைகளால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் சேலைகள் ஜவுளிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த தொழில் வர்த்தக கண்காட்சியை மதுரை ஆதீனம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்ட மதுரை ஆதீனம் அங்கிருந்தவர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனத்திடம் பேட்டி கொடுக்குமாறு கேட்டபோது, பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவிவிட்ருவங்க என்று கூறி புறப்பட்டார்.